EPS vs MK Stalin: திமுக - பாஜக இடையே ரகசிய உறவு! அண்ணாமலையின் போன் அழைப்பை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் விளாசல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps Vs Mk Stalin: திமுக - பாஜக இடையே ரகசிய உறவு! அண்ணாமலையின் போன் அழைப்பை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் விளாசல்!

EPS vs MK Stalin: திமுக - பாஜக இடையே ரகசிய உறவு! அண்ணாமலையின் போன் அழைப்பை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் விளாசல்!

Kathiravan V HT Tamil
Published Aug 18, 2024 05:35 PM IST

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் ‘கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் நாங்கள் கலந்து கொள்கிறோம்’ என்று சொன்ன உடனேயே ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளாது, ஆனால் அரசு சார்பில் கலந்து கொள்ளும் என்று கூறி இரட்டை வேடம் போடுகின்றனர்.

திமுக - பாஜக இடையே ரகசிய உறவு! அண்ணாமலையின் போன் அழைப்பை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் விளாசல்!
திமுக - பாஜக இடையே ரகசிய உறவு! அண்ணாமலையின் போன் அழைப்பை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் விளாசல்!

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்று அம்மா அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள். அதற்காக முழுக்க முழுக்க மாநில நிதி 1652 கோடியை கொண்டு 90 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கொரோனா காலத்தில் அந்த பணி சற்று தொய்வு ஏற்பட்டது. ஆனால் அதற்கு பின்னர் வந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பாக்கி இருந்த 10 சதவீத பணிகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்து இருந்தார்கள். இந்த அரசு நினைத்து இருந்தால் பொறுப்பேற்ற 6 மாத காலத்தில் திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம். கோவை விமான நிலைய விரிவாக்கம், வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. 

இந்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

கலைஞர் கருணாநிதியின் நாணயம் இந்தியில் உள்ளது.  தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு 300 முறை சொல்லும் ஸ்டாலின் இந்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார். 

திமுகவும் பாஜகவும் ரகசிய உறவை கொண்டு உள்ளது இதன் மூலம் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில், திமுக ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளது என்று கூறி உள்ளார். 

இரட்டை வேடம் போடுகின்றனர்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் ‘கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் நாங்கள் கலந்து கொள்கிறோம்’ என்று சொன்ன உடனேயே ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளாது, ஆனால் அரசு சார்பில் கலந்து கொள்ளும் என்று கூறி இரட்டை வேடம் போடுகின்றனர். 

அண்ணாமலையின் பேட்டி திமுக- பாஜகவின் உறவை வெட்டவெளிச்சம் ஆக்கிவிட்டது. டெல்லியில் திமுக எம்.பிக்கள் அளித்த தேநீர் விருந்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார், ஆனால் இவர்கள் கண்ணுக்கு ராகுல் காந்திக்கு தெரியவில்லை. சென்னையில் திறக்கப்பட்ட கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வெங்கையா நாயுடுதான் அழைக்கப்பட்டார். 

ராகுல் காந்தியை அழைக்காதது ஏன்?

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக நாங்களும் நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட்டோம். ஆனால் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவுக்கு ராகுல் காந்தியை அழைத்து வந்து இருக்கலாமே என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். 

காவிரி, முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பாக விமர்சனம் 

அதிமுக அரசு இருக்கும் போது காவிரி நதிநீர் விவாகரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி அதிமுக எம்.பிக்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க செய்தோம். ஆனால் தற்போது உள்ள திமுக எம்.பிக்கள் என்ன செய்து வருகின்றனர். எப்போதுமே தமிழ்நாட்டை பற்றி கவலைப்படாத கட்சியாக திமுக உள்ளது. 

அதிமுக அரசு இருந்த போது முல்லைப்பெரியாறு அணை எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதை உறுதி செய்தோம் என்பதையும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.