EPS vs MK Stalin: திமுக - பாஜக இடையே ரகசிய உறவு! அண்ணாமலையின் போன் அழைப்பை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் விளாசல்!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் ‘கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் நாங்கள் கலந்து கொள்கிறோம்’ என்று சொன்ன உடனேயே ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளாது, ஆனால் அரசு சார்பில் கலந்து கொள்ளும் என்று கூறி இரட்டை வேடம் போடுகின்றனர்.

அண்ணாமலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன் செய்து பேசியதன் மூலம் திமுக - பாஜக இடையே இருந்த ரகசிய உறவு வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்று அம்மா அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள். அதற்காக முழுக்க முழுக்க மாநில நிதி 1652 கோடியை கொண்டு 90 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கொரோனா காலத்தில் அந்த பணி சற்று தொய்வு ஏற்பட்டது. ஆனால் அதற்கு பின்னர் வந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பாக்கி இருந்த 10 சதவீத பணிகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்து இருந்தார்கள். இந்த அரசு நினைத்து இருந்தால் பொறுப்பேற்ற 6 மாத காலத்தில் திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம். கோவை விமான நிலைய விரிவாக்கம், வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இந்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
கலைஞர் கருணாநிதியின் நாணயம் இந்தியில் உள்ளது. தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு 300 முறை சொல்லும் ஸ்டாலின் இந்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்.