தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'சொத்து வரி அபராதத் தொகையை வசூலிக்க துடிக்கும் விடியா திமுக அரசு' - இபிஎஸ் சரமாரி தாக்கு

'சொத்து வரி அபராதத் தொகையை வசூலிக்க துடிக்கும் விடியா திமுக அரசு' - இபிஎஸ் சரமாரி தாக்கு

Karthikeyan S HT Tamil
Oct 06, 2023 11:20 AM IST

EPS Statement: சொத்து வரி கால தாமதமாக செலுத்துவோருக்கு 1 சதவீதம் அபராதத் தொகை வசூலிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இபிஎஸ்
இபிஎஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற கடந்த 29 மாதங்களாக மக்கள் மீது சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு அனைத்து அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை உயர்வுகள், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுகள் உள்ளிட்ட கட்டண உயர்வுகள் மூலம் மென்மேலும் மக்களை துன்புறுத்தி வருகிறது.

மேலும், மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக அனைத்துத் தொழில் துறையினரும் மிகவும் பாதிக்கப்பட்டு தொழில் முனைவோர்கள், தொழிலாளர் குடும்பங்கள் வேலை வாய்ப்பின்மை மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்து தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடப்பு நிதியாண்டில் (2023-2024) முதல் தவணை இரண்டாம் தவணைகளை, மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் மக்கள் காலதாமதாக வரி செலுத்தினால் 1 சதவீதம் அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று சட்டம் கொண்டு வந்து மக்களை மேலும் வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, வரி உயர்வுக்ககாக பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது" என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது வரியை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், தாமதத்திற்கு 1 சதவீதம் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆகவே, இந்த விடியா திமுக அரசின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

புதிதாக விதிக்கப்பட்டுள்ள 1 சதவீத அபராதக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டியும், உயர்த்தப்பட்ட வரி உயர்வுகளை குறைக்க எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தி, சர்வாதிகாரி மனப்பான்மையோடு மறுபரிசீலனை செய்யாத விடியா திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேலும், தமிழகம் முழுவதும் பொதுமக்களை ஒன்று திரட்டி விடியா திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்