தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore: விபத்து ஏற்படுத்திய வெளிநாட்டவரிடம் ஆதார் அட்டை.. அதிர்ச்சியில் காவலர்கள்!

Coimbatore: விபத்து ஏற்படுத்திய வெளிநாட்டவரிடம் ஆதார் அட்டை.. அதிர்ச்சியில் காவலர்கள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 22, 2023 11:40 AM IST

இந்தியராக இல்லாத ஒருவரிடம் ஆதார் அட்டை இருப்பது தகவல் பாதுகாப்பு விவகாரத்தில் பெரும் கேள்வி குறியை ஏற்படுத்தி உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

விபத்து ஏற்படுத்தியவரிடம் ஆதார்
விபத்து ஏற்படுத்தியவரிடம் ஆதார்

ட்ரெண்டிங் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கோவை, உக்கடம் காவல் நிலையத்தில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், வழக்கம் போல பணியை முடித்து விட்டு இரவு 10 மணி அளவில் காந்திபுரத்தில் இருக்கின்ற தன்னுடைய வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் கிளம்பி உள்ளார். அப்போது ஒப்பணக்கார வீதி பிரகாசம் சிக்னல் அருகே வரும் போது ஒரு வழி பாதையில் எதிரே இருந்து மற்றொரு இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து அந்த பகுதியில் அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு காவலர் மாரிமுத்து மற்றும் எதிரே வந்த வாகனத்தில் இருந்த 2 பேர் என்று 3 பேரும் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் மாரிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரை இழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய நபர் சூடான் நாட்டைச் சேர்ந்த சுகைப் என்பதும், அவர் சென்னையில் இருக்கின்ற தெரசா கல்லூரியில் பி ஃபார்ம் படித்து வருவதும் தெரிய வந்தது.

அதோடு, இவர் தன்னுடைய நண்பர்களான சுராக் மற்றும் இப்ராஹிம் என்பவரை பார்க்க டெல்லியில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்னர் கோவைக்கு வந்த நிலையில், இவர்கள் போத்தனூர் பகுதியில் இருக்கின்ற சுராக் வீட்டில் இருப்பதும் தெரியவந்து உள்ளது. அதோடு, இந்தியாவில் தங்கிப் படித்து வரும் மாணவரான சூடான் நாட்டைச் சார்ந்தவரிடம் இந்தியர்களுக்கான அடையாளமாக இருக்கின்ற ஆதார் அட்டை இருப்பது காவல் துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அவருக்கு ஆதார் அட்டை எப்படி கிடைத்தது? இதன் பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா போன்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை தீவிரபடுத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே தனிநபர் அடையாளங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில் நாய் போன்றவற்றிற்கு ஆதார் அட்டை இருந்தது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்தியராக இல்லாத ஒருவரிடம் ஆதார் அட்டை இருப்பது தகவல் பாதுகாப்பு விவகாரத்தில் பெரும் கேள்வி குறியை ஏற்படுத்தி உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்