Srilanka: “6 மாதம் மக்கள் இதை பொறுத்துக் கொண்டால்…” இலங்கை அதிபர் கோரிக்கை
Ranil Wickremesinghe: “நாம் இப்போது எதிர்மறையான பொருளாதாரத்தில் இருந்து நேர்மறையான பொருளாதாரத்தை நோக்கி நகர்த்து கொண்டிருக்கிறோம்.”
ஆண்டு இறுதிக்குள் இலங்கை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு கொள்கை அறிக்கையை தாக்கல் செய்து அவர் மேலும் கூறியதாவது:
இலங்கையின் பொருளாதாரம் இவ்வருட இறுதியிலிருந்து மீண்டும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கிறோம். 2026 ஆம் ஆண்டில் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும்.
நாம் இப்போது எதிர்மறையான பொருளாதாரத்தில் இருந்து நேர்மறையான பொருளாதாரத்தை நோக்கி நகர்த்து கொண்டிருக்கிறோம்.
பூஜ்ஜியமாக வீழ்ச்சியடைந்த அந்நிய கையிருப்பை இப்போது 500 மில்லியன் டாலர்கள் வரை நம்மால் உயர்த்த முடிந்தது.
சீனாவுடன் நேரடியாகப் பேசி வருகிறோம். அனைத்து தரப்பினரிடமிருந்தும் எங்களுக்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன.
நாங்கள் இப்போது மற்ற நாடுகளின் அணுகுமுறைகளையும் சீனாவின் அணுகுமுறைகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் செயல்படுகிறோம்.
இலங்கையின் மற்ற முக்கிய கடன் வழங்குனர்களான இந்தியா மற்றும் ஜப்பான் ஏற்கனவே எங்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.
இன்னும் 6 மாதங்களுக்கு அதிக நேரடி வரிகளை பொதுமக்கள் பொறுத்துக் கொண்டால் அரசாங்கத்தால் பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடியும்.
இந்தத் திட்டத்தின்படி நாம் தொடர்ந்தால், 2026க்குள் நாம் திவால் நிலையிலிருந்து மீண்டு வரலாம். நான் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தது போல, இந்த நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் இணைந்தால், இந்த நெருக்கடியிலிருந்து நாம் முன்கூட்டியே விடுபட முடியும்.
ஆண்டு இறுதிக்குள் பணவீக்கத்தை ஒற்றை இலக்கமாகக் குறைப்பதே நோக்கமாக இருந்தது. இலங்கையின் முக்கிய பணவீக்க வீதமான கொழும்பு நுகர்வோர் விலை குறியீட்டு எண் டிசம்பரில் 57.2% ஆக இருந்தது. ஜனவரியில் 54.2% ஆக குறைந்துள்ளது என்று ரணில் விக்மரசிங்கே தெரிவித்தார்.
டாபிக்ஸ்