தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Corona Virus: வேகமெடுக்கும் கொரோனா.. புதுச்சேரி ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!

Corona Virus: வேகமெடுக்கும் கொரோனா.. புதுச்சேரி ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!

Karthikeyan S HT Tamil
Apr 07, 2023 11:02 AM IST

Mask Mandatory: புதுச்சேரியில் பொது இடங்களில் மீண்டும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் முகக் கவசம் கட்டாயம் அணிய உத்தரவு
புதுச்சேரியில் முகக் கவசம் கட்டாயம் அணிய உத்தரவு

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளை கொரோனா எனும் கொடிய வைரஸ் அச்சுறுத்தி வந்தது. சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் முதல் அலையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஆல்பா, டெல்டா, ஒமிக்ரைன் போன்ற கொரோனா வேரியண்ட் வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின. இதனால் ஏராளமானோர் உயிரிழந்தனர். தடுப்பூசிகள் செலுத்தியதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியிலும் கடந்த ஓராண்டுக்கு பிறகு சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 36 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 390 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இவர்களில் 13 பேர் புதுச்சேரியையும், 19 பேர் காரைக்காலையும், 5 பேர் ஏனாமையும், 2 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 32 பேர் குணமடைந்தனர். தற்போது மருத்துவமனைகளில் 6 பேர், வீடுகளில் 139 பேர் என 145 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதன்மூலம் புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் 15 சதவீதத்தை எட்டியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மீண்டும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

இதுகுறித்து புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், " புதுச்சேரியில் கடந்த ஓராண்டாக கொரோனா பரவல் இல்லை. கடந்த சில வாரங்களாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கொரோனா ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயமுள்ளது. எனவே புதுச்சேரி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, சந்தை, பூங்கா, திரையரங்குகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அப்படி அணியாவிட்டால் அதன்பிறகு மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்கும் என ஆட்சியர் தெரிவித்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்