Karnataka Polls: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு-முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன?
ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே போட்டி வலுப்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக வெறுப்பை பரப்பும் தனிநபர், அமைப்புகள் ஆகியவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
கர்நாடகத்தில் வரும் 10 ம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே போட்டி வலுப்பெற்றுள்ளது.
பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் கர்நாடகத்தில் சூறாவளி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டனர்.
பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரை லிட்டர் பால், வருடத்திற்கு 3 கியாஸ் சிலிண்டர் ஏழை குடும்பத்திற்கு இலவசமாக அளிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா எனப்படும் பிஎஃப்ஐ, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் உள்பட சமூகத்தில் மதத்தை வைத்து வெறுப்பை பரப்பினால், எந்த ஒரு அமைப்போ, தனிநபரோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மதம், ஜாதி ஆகியவற்றை வைத்து குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்பும் அமைப்புகளுக்கு எதிராக சட்டத்திற்கு உள்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அது தனிநபராக இருந்தாலும் சரி, தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அல்லது வேறு பிற அமைப்புகளாக இருந்தாலும் சரி, பஜ்ரங் தளமாக இருந்தாலும் சரி; சட்டத்திற்கிணங்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மல்லிகார்ஜுன கார்கே.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா, கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கெரா ஆகியோரும் தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது உடனிருந்தனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகள்
*இரவு நேரப் பணி புரியும் போலீஸாருக்கு சிறப்பு கொடுப்பனவு மாதம் ரூ.5ஆயிரம் அளிக்ப்படும்
* பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை
*வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி, மகளிருக்கு இலவச பயணம், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரின் வளர்ச்சிக்கு நடவடிக்கை.
முன்னதாக, கடந்த மாதம் தேர்தல் பிரசாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கார்நாடக மாநிலத்திற்கு வந்திருந்தார்.
ஷிராஹட்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசியபோது, "பாஜகவுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு எதிராக உங்களை பாதுகாக்க உதவும்.
தாமரை சின்னத்திற்கு நீங்கள் அளிக்கும் வாக்கு, ஒரு எம்எல்ஏவையோ அல்லது முதலமைச்சரையோ தேர்ந்தெடுப்பதற்காக மட்டுமல்ல. மாறாக, பிரதமரின் கரங்களை மேலும் வலுப்படுத்துவதற்காகவே இருக்கும். குறிப்பாக மஹான் கர்நாடகாவை உருவாக்குவதற்காக உங்கள் வாக்கு அமையும்" என்று பேசினார் அமித் ஷா.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அதன் துணை அமைப்புகள் ஆகியவற்றை சட்டவிரோத அமைப்புகள் என இறுதி செய்து அவற்றிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தடை விதித்தது.
கர்நாடகத்தில் 10ம் தேதி வாக்குப் பதிவும், 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.
டாபிக்ஸ்