HBD Sunaina: மருதாணிப் பூவைப்போல நிற்கும் சுனைனா.. எந்தரோல் கொடுத்தாலும் சளைக்காமல் நடிக்கும் சுனைனாவுக்கு பிறந்தநாள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Sunaina: மருதாணிப் பூவைப்போல நிற்கும் சுனைனா.. எந்தரோல் கொடுத்தாலும் சளைக்காமல் நடிக்கும் சுனைனாவுக்கு பிறந்தநாள்!

HBD Sunaina: மருதாணிப் பூவைப்போல நிற்கும் சுனைனா.. எந்தரோல் கொடுத்தாலும் சளைக்காமல் நடிக்கும் சுனைனாவுக்கு பிறந்தநாள்!

Marimuthu M HT Tamil Published Apr 17, 2024 07:15 AM IST
Marimuthu M HT Tamil
Published Apr 17, 2024 07:15 AM IST

HBD Sunaina: நடிகை சுனைனாவின் பிறந்தநாள் தொடர்பான சிறப்புக் கட்டுரையினைக் காணலாம்.

  நடிகை சுனைனா
நடிகை சுனைனா

யார் இந்த நடிகை சுனைனா? நடிகை சுனைனா, ஹரிஷ் யெல்லா மற்றும் சந்தியா யெல்லா தம்பதியினருக்கு மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் 1989ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் தேதி பிறந்தவர். இவரது மற்றொரு பெயர் ஹேமாக்சி ஆகும். நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மாடலிங் மற்றும் சினிமாவுக்கான வாய்ப்புகளைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வந்த சுனைனாவுக்கு குமாரி vs குமாரி என்னும் தெலுங்கு படத்தில் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவரது வயது 16. அதன்பின், 2006ஆம் ஆண்டு, சம்திங் ஸ்பெஷல், 10ஆம் வகுப்பு என்னும் தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார். அதே ஆண்டு, பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் என்னும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமான சுனைனா, அப்படத்தில் காவ்யா என்னும் கதாபாத்திரத்தின் பெயரில் நடித்தார்.

மேலும், 2007ஆம் ஆண்டு, மிஸ்ஸிங் என்னும் தெலுங்கு படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்தார். இதற்கிடையே, 2008ஆம் ஆண்டு கன்னட மொழியில் கங்கே பாரே துங்கே பாரே என்னும் படத்தில் நடித்து, அம்மொழியில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன்பின், அதே ஆண்டில் தமிழில் காதலில் விழுந்தேன் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதில் அவர் நடித்த மீரா என்னும் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. பின், 2009ஆம் ஆண்டு, மாசிலாமணி திரைப்படத்தில் திவ்யா ராமநாதன் என்னும் கேரக்டரில் நடித்து பெயர் பெற்றார். இந்த இரண்டு படங்களும், சுனைனாவுக்கு நல்ல மைலேஜை பெற்றுக்கொடுத்தன.

பின் யாதுமாகி திரைப்படத்தில் அன்னலட்சுமி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார்.அதைத்தொடர்ந்து வம்சம் என்னும் திரைப்படத்தில் மலர்க்கொடி என்னும் கிராமத்து மங்கையாக நடித்திருந்தார். இதன்மூலம் விமர்சன ரீதியாகவும், கிராமத்துப் பெண்ணாகவும் நடித்து நல்ல பெயரைப் பெற்றார். அதன்பின் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கத்தொடங்கினார், சுனைனா. அதன்பின் 2012ஆம் ஆண்டு பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி , நீர்ப்பறவை ஆகியப் படங்கள், இவரது நடிப்பில் வெளியாகின. அதில் இன்று வரை நீர்ப்பறவை படத்தில் இவர் நடித்த இளைய எஸ்தர் கேரக்டருக்கு யாரும் அவ்வளவு உயிரோட்டமாக நடித்திருக்கமாட்டார்கள் என்னும் அளவுக்கு நன்கு நடித்திருந்தார். இப்படத்துக்கான சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதில் இவரது பெயரும் அடிபட்டது.

அதன்பின், 2013ஆம் ஆண்டு விஷாலுடன் சேர்ந்து சமர் திரைப்படத்தில் ரூபா என்னும் கேரக்டரிலும், வன்மம் படத்தில் வதனா என்னும் கேரக்டரிலும் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து பல நடிகைகளின் கனவாகப் பார்க்கப்படும் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கவேண்டும் என்னும் ஆசையின் ஒரு பகுதி, சுனைனாவுக்கு பலித்தது. அவர்,தெறி படத்தில் நடிகர் விஜய் போய் பார்க்கும் மணப்பெண்ணாக ஒரு சின்ன கேமியோ ரோலில் நடித்திருந்தார். தவிர, நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன், ஆகியப் படங்கள் சுனைனாவுக்கு அடுத்தடுத்த படங்களாக அமைந்தன. அதில் தொண்டன் படத்தில் சுனைனா நடித்த பகலமுகி கேரக்டர் கவனம் ஈர்த்தது. அதன்பின் எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி ஆகியப் படங்களும் சுனைனாவுக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்தன. இருந்தாலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்னும் வலைத்தொடர் நல்லவரவேற்பினைப் பெற்று வருகிறது.