ரூ. 100 கோடி மான நஷ்ட வழக்கு..அமைச்சருக்கு எதிராக குடும்பத்துடன் வாக்குமூலத்தை பதிவு செய்த நாகார்ஜூனா
மனைவி அமலா, மகன் நாக சைதன்யாவுடன் இணைந்து ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்துக்கு வந்த நாகசைதன்யா, அமைச்சர் சுரேகாவுக்கு எதிரான ரூ. 100 கோடி மான நஷ்ட வழக்கில் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

தனது மகன் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக தெலங்கானா அமைச்சர் கோண்டா சுரேகாவுக்கு எதிராக ரூ. 100 கோடி கிரிமினல் அவதூறு வழக்கில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய நடிகர் நாகார்ஜுனா ஹைதராபாத் உள்ள நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
என்ன வழக்கு?
பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 356இன் கீழ் சுரேகா மீது நாகார்ஜுனா புகார் அளித்துள்ளார். நட்சத்திர ஜோடிகளான சமந்தா மற்றும் நாகா சைதன்யா கடந்த 2021இல் விவாகரத்து பெற்றனர். இதற்கு காரணம் பிஆர்எஸ் மூத்த தலைவர் கே.டி. ராமாராவ் தான் காரணம் என்று ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சுரேகா பேசியிருந்தார். கடந்த வாரம் அவர் வெளிப்படுத்திய இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது.
அத்துடன், அவரது பேச்சுக்கு எதிராக தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். நாக சைதன்யா, சமந்தா ஆகியோர் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்ததோடு, தங்களது பிரிவு பரஸ்பரம் நடந்தது எனவும், தனிப்பட்ட முடிவு எனவும் தெரிவித்தனர்.