Fact Check : ‘’ லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள்’’ சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்.. உண்மை என்ன?
Fact Check : லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள் இந்த உலகில் மரணத்தை விட உண்மை எதுவுமில்லை என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் உண்மையா என்பது குறித்து இதில் காண்போம்.

‘’ லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வு செய்தது.

இதில், ‘’ லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள்
இந்த உலகில் மரணத்தை விட உண்மை எதுவுமில்லை.
உலகின் மிக விலையுயர்ந்த பிராண்டட் கார் எனது கேரேஜில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நான் சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டேன்!
இந்த உலகில் உள்ள அனைத்து விதமான டிசைன்கள் மற்றும் வண்ணங்கள், விலையுயர்ந்த ஆடைகள், விலையுயர்ந்த காலணிகள், விலையுயர்ந்த அணிகலன்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளன. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய குட்டை கவுனில் இருக்கிறேன்!
எனது வங்கிக் கணக்கில் நிறைய பணம் இருந்தாலும் அதனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. என் வீடு எனக்கு அரண்மனை போன்றது, ஆனால் நான் ஒரு மருத்துவமனையில் ஒரு சிறிய படுக்கையில் படுத்திருக்கிறேன்.
நான் இந்த உலகில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நகர்ந்து கொண்டே இருந்தேன். ஆனால் இப்போது நான் மருத்துவமனையில் ஒரு ஆய்வகத்திலிருந்து மற்றொரு ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறேன்!
எந்த வசதியும் எனக்கு உதவவில்லை.
ஒரு காலத்தில் 7 சிகையலங்கார நிபுணர்கள் தினமும் என் தலைமுடியை செய்வார்கள். ஆனால், இன்று என் தலையில் முடி இல்லை.
நான் உலகெங்கிலும் உள்ள பல்வேறு 5 நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிட்டேன். ஆனால் இன்று என் உணவு ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரைகள் மற்றும் இரவில் ஒரு துளி உப்பு.
நான் வெவ்வேறு விமானங்களில் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஆனால், இன்று இரண்டு பேர் எனக்கு மருத்துவமனை வராண்டாவிற்கு உதவுகிறார்கள்.
எந்த வசதியும் எனக்கு உதவவில்லை.
அதற்காக நான் எந்த வகையிலும் தளரவில்லை.
ஆனால், சில அன்பர்களின் முகங்கள், அவர்களின் பிரார்த்தனைகள் என்னை வாழ வைக்கின்றன.
இதுதான் வாழ்க்கை.
எவ்வளவு செல்வம் இருந்தாலும், கடைசியில் வெறுங்கையுடன் சென்று விடுவீர்கள்.
எனவே அன்பாக இருங்கள், உங்களால் முடிந்தவர்களுக்கு உதவுங்கள். பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் மக்களை மதிப்பிடுவதை தவிர்க்கவும்.
நல்லவர்களை நேசியுங்கள், உங்களுக்காக இருப்பவர்களை நேசியுங்கள், யாரையும் புண்படுத்தாதீர்கள், நல்லவர்களாக இருங்கள், நல்லவர்களாகவே இருங்கள், ஏனென்றால் அதுதான் உங்களுடன் செல்லும்.😌
-லதா மங்கேஷ்கர்,,,
*Latha Mangeshkar’s last words*,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது போன்று, லதா மங்கேஷ்கர் அவரது வாழ்க்கையின் கடைசி நிமிடங்களில் எதுவும் கருத்து தெரிவிக்கவே இல்லை. அப்படியான செய்தி எதுவும் காணக் கிடைக்கவில்லை.
குறிப்பாக, ‘’ஒரு காலத்தில் 7 சிகையலங்கார நிபுணர்கள் தினமும் என் தலைமுடியை செய்வார்கள். ஆனால், இன்று என் தலையில் முடி இல்லை,’’ என்று லதா மங்கேஷ்கர் கூறியதாகவும், அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
வழக்கமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி தருவதற்காக, மொட்டை அடித்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். எனவே, நமக்கு மேற்கண்ட பதிவை பார்த்ததும், யாரோ ஒரு புற்றுநோயாளி தெரிவித்த கருத்தை எடுத்து, லதா மங்கேஷ்கர் பெயரில் பரப்புகிறார்களோ என்று சந்தேகம் எழுந்தது.
மருத்துவர்கள் தரப்பில்
ஏனெனில், இறுதிக்காலம் வரை லதா மங்கேஷ்கர் தலைமுடியுடனே காணப்பட்டார்; மொட்டைத் தலையாகவோ அல்லது அவருக்கு புற்றுநோய் என்றோ எந்த செய்தியிலும் குறிப்பிடவில்லை.
It is with profound grief that we announce the sad demise of #LataMangeshkar at 8:12am. She has died because of multi-organ failure after more than 28 days of hospitalisation post #COVID19: Dr Pratit Samdani, who was treating her at Mumbai's Breach Candy Hospital pic.twitter.com/ndqdJWpqb1
— ANI (@ANI) February 6, 2022
அவரது மரணத்திற்கு multiple organ dysfunction syndrome மட்டுமே காரணம் என்றுதான் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
Kyrzayda Rodriguez என்ற ஃபேஷன் மாடல்
இதையடுத்து, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள கருத்துகளை கூறியது யார் என்று மீண்டும் தகவல் தேடினோம். அப்போது, இது கடந்த 2018ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த Dominican Republic நாட்டைச் சேர்ந்த Kyrzayda Rodriguez என்ற ஃபேஷன் மாடல் என விவரம் கிடைத்தது.

இவர்தான், இறக்கும் முன்பாக, வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். அதில், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்ற கருத்தை பேசியிருந்தார்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. . .