SS Rajamouli:அப்பா எழுதிய RSS கதை; படித்து கதறி அழுத ராஜமெளலி- பேட்டியில் பகீர்!
ஆர்எஸ்எஸ் பற்றிய அந்தக்கதையை தான் இயக்கினால் அது தனக்கு பெருமையை தேடி தரும் என பிரபல இயக்குநர் ராஜமெளலி பேசியுள்ளார்
பிரபல இயக்குநர் ராஜமெளலி இயக்கிய படங்கள் அனைத்தின் கதையும் அவரது தந்தை விஜேந்திர பிரசாத்தின் உடையதே. மக்களுக்கு மிகவும் பிடித்த கதைகளை எழுதுவதில் கில்லாடியாக உள்ள அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பற்றிய கதை ஒன்றையும் எழுதியிருக்கிறாராம். இதை ராஜமெளலி படித்து பல முறை அழுதும் இருக்கிறாராம்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த நிலையில் இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராஜமெளலி, “எனக்கு ஆர்எஸ்எஸ் பற்றி அதிகம் தெரியாது. நான் அந்த அமைப்பை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் அது எப்படி உருவானது?
அவர்களின் நம்பிக்கைகள் என்ன ? அவர்கள் எவ்வாறு வளர்ந்தார்கள் உள்ளிட்ட எவையும் எனக்குத்தெரியாது. ஆனால் நான் எனது தந்தை ஆர் எஸ் எஸ் பற்றி எழுதிய அந்தக்கதையை படித்தேன். அது உண்மையில் அவ்வளவு உணர்ச்சிகரமானதாக இருந்தது.
அந்தக்கதையை நான் படிக்கும் போது பல முறை அழுதேன். அந்தக்கதையில் உள்ள ட்ராமா என்னை அழ வைத்தது. ஆனால் அதற்கும் நிஜ வரலாற்றுப் பகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது மிக மிக நல்ல கதை. ஆனால் அது சமூகத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. என் தந்தை எழுதிய கதையை நான் இயக்குவேனா? என்று நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
முதலாவதாக, இது சாத்தியமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் எனது தந்தை இந்தக்கதையை வேறு ஏதேனும் அமைப்புக்காகவோ, நபர்களுக்காகவோ அல்லது தயாரிப்பாளருக்காகவோ எழுதியிருக்கிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை.
அந்தக்கேள்விக்கு, என்னிடம் திட்டவட்டமான பதில் இல்லை. அந்தக்கதையை நான் இயக்கினால் உண்மையில் பெருமையடைவேன். காரணம், அந்தக்கதை அழகான, மனிதம் மற்றும் உணர்ச்சிகளை உள்ளடக்கியது.
இது எதிர்மறையான தாக்கத்தையோ அல்லது நேர்மறையான விளைவையோ ஏற்படுத்தும் என்பது பற்றி என்று நான் எதுவும் கூறவில்லை. நான் இன்னும் அதில் உறுதியாகவில்லை” என்று பேசியுள்ளார்.
தாக்கத்தை ஏற்படுத்திய ஆர்.ஆர்.ஆர்!
பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ். ராஜமெளலியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமாராம் பீம் ஆகியோரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ராஜூவாக ராம் சரணும், பீமாக ஜூனியர் என்.டி.ஆரும் நடித்தனர். இவர்களுடன் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த இந்த படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
இந்த வரவேற்பை தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜப்பானில் வெளியானது. அங்குள்ள மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற ஆர்.ஆர்.ஆர் அங்கும் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை ஈட்டியது. குறிப்பாக ஜப்பானில் முன்னதாக வெளியாகி அதிக வசூலை ஈட்டிய இந்திய படம் என்று சாதனை படைத்திருந்த ரஜினியின் முத்து படத்தின் வசூலை விட அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இதன் மூலம் ஜப்பானில் வெளியாகி அதிக வசூலை ஈட்டிய இந்திய படமாக ஆர்.ஆர்.ஆர் மாறியது.
இதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம் பெற்று வரவேற்பை பெற்ற நாட்டு நாட்டு பாடல் அண்மையில் கோல்டன் குளோப் விருதையும் வென்றது. சிறந்த அசல் பாடலுக்கான விருது பட்டியலில் இடம் பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ரிஹானா, லேடி காகா மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட் ஆகியோரின் பாடல்களை கடந்து வெற்றி பெற்றது. ஆஸ்கர் விருது பட்டியலிலும் இந்தப்பாடல் சிறந்த அசல் பாடல் (Best Original Song category) பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஹாலிவுட்டின் மிகப்பெரிய ஜாம்பவான்களான ஜேம்ஸ் கேம்ரூன், ஸ்டீவன் ஸ்பில்பேர் ஆகியோர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்