HBDVaralaxmi:‘10 ரூபாவாது கொடுங்க’ - புற்றுநோயாளிகளுக்காக வரலட்சுமி கோரிக்கை!
நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்று தன்னுடைய 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்
பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். சிலம்பரசன் நடித்த ‘போடா போடி’ படத்தில் நடித்ததின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து ‘தாரை தப்பட்டை’ ‘விக்ரம் வேதா’ ‘சர்கார்’ ‘சண்டக்கோழி பாகம் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். 1985 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி பிறந் இவருக்கு இன்றைய தினம் 38 ஆவது பிறந்தநாள் ஆகும்.
ட்ரெண்டிங் செய்திகள்
தன்னுடைய பிறந்த நாளை சென்னை எழும்பூரில் உள்ள 'Institute of Child Health'-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாட நினைத்த வரலட்சுமி, அங்கு சென்று அவர்களுடன் தன்னுடைய நேரத்தை செலவிட்டார். ஜாய் ஆஃப் ஷேரிங்' என்ற இந்த நிகழ்வை, சேவ் சக்தி அறக்கட்டளை மற்றும் சங்கல்ப் பியூட்டிஃபுல் வேர்ல்ட் ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசும் போது, “புற்றுநோயாளிகள் பலரைக் காப்பாற்றும் இதயத்தைத் தொடும் பணியைச் செய்து வரும் மீட்பர்களான மருத்துவர்களுடன் இந்த பிறந்தநாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது நெருங்கிய, அன்புக்குரியவர்கள் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்படும்போது மட்டுமே புற்றுநோய் குறித்து சிந்திக்கிறோம். இவர்களுக்கு நாம் எதாவது நன்மை செய்ய வேண்டும் என்றால், நாம் அதிகம் சிரமப்படவோ அல்லது பெரிய அளவில் ஏதாவது பங்களிக்கவோ தேவையில்லை. ஆனால், குறைந்தபட்சம் ரூ.10 கொடுப்பது கூட பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சென்னையிலிருந்து கொல்கத்தா வரை 1746 கிமீ தூரத்தை சைக்கிள் பயணம் மேற்கொண்டு முடித்தவர்களைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். நெகிழ்ச்சியாக உள்ளது. பல நோயாளிகளைக் குணப்படுத்தி, அவர்களின் உயிர்காக்கும் பணியில் உள்ள சங்கல்ப் மற்றும் மருத்துவர்கள் என்னை மிகவும் நெகிழ வைத்துள்ளனர்.
பல நோயாளிகள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”என்றார்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நடிகை வரலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கினார் மற்றும் புற்றுநோய் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னையிலிருந்து கொல்கத்தா வரை 1746 கிமீ தூரத்தை சைக்கிளில் பயணித்து முடித்தவர்களையும் அவர் பாராட்டினார்.
டாபிக்ஸ்