33 Years of Captain Prabhakaran: 'ஆட்டமா தேரோட்டமா'..விஜயகாந்தின் அடையாளமாக மாறிய கேப்டன் பிரபாகரன் ரிலீஸான நாள் இன்று!
Captain Vijayakanth: மறைந்த நடிகர் விஜயகாந்தின் 100-வது திரைப்படமாக உருவாகி இருந்த கேப்டன் பிரபாகரன் வெளியாகி இன்றோடு 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இத்திரைப்படம் குறித்த சுவரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் சினிமாவில் இன்று வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக திகழ்ந்து வருகிறார் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் 1980-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருபெரும் நட்சத்திரங்கள் கோலோச்சிக் கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் டஃப் கொடுத்து தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் விஜயகாந்த்.
கருப்பு தேகம், சிவந்த கண்களுடன் தனக்கான அங்கீகாரத்தை தேடிக்கொண்டிருந்த விஜயகாந்தின் கேரியரில் மிக முக்கியமான முதல் படமாக அமைந்தது என்றால்'சட்டம் ஒரு இருட்டறை' தான். அதன்பின் வெளிவந்த 'சிவப்பு மல்லி' திரைப்படத்தின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து திரையுலகில் வெற்றி தோல்வி என வலம் வந்த விஜயகாந்திற்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது 'கேப்டன் பிரபாகரன்'.
ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்துடன் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், எம்.என்.நம்பியார், மன்சூர் அலிகான், காந்திமதி, பொன்னம்பலம்,உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாவட்ட வன அதிகாரியாக விஜயகாந்த் நடித்து அசத்தியிருந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. விஜயகாந்தின் 100-வது படம், வெள்ளி விழா சாதனை கண்ட திரைப்படம் என்ற பல பெருமைகளையும் பெற்றிருந்தது.