தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Senthil Balaji: ’கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா போட்டியா?’ அனுதாப ஓட்டுக்களை அள்ள திமுக திட்டம்!

Senthil Balaji: ’கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா போட்டியா?’ அனுதாப ஓட்டுக்களை அள்ள திமுக திட்டம்!

Kathiravan V HT Tamil
Mar 18, 2024 08:23 AM IST

“Lok sabha Election 2024: இன்றைய தினக் காங்கிரஸ், மதிமுக கட்சிகள் போட்டியிடும் இடங்கள் இறுதி செய்யப்பட்ட உடன் திமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

மேகலா செந்தில் பாலாஜி - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
மேகலா செந்தில் பாலாஜி - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். 

மார்ச் 28ஆம் தேதி  வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 

திமுக கூட்டணியை பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டு தொகுதிகள் பங்கிர்ந்து அளிக்கப்பட்டுவிட்டன. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மட்டும் தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படாத நிலையில் ராஜ்யசபா எம்பி சீட் வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் மதிமுகவுடன் ஒரு தொகுதியும், காங்கிரஸ் கட்சி உடன் 10 தொகுதிகளும் கையெழுத்தான நிலையில் இதுவரை இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எது என்பது அடையாளப்படுத்தவில்லை. 

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்ட சில தொகுதிகளை திமுக தலைமை மாற்றி வழங்கதிட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி ஆரணி, கரூர், திருச்சி உள்ளிட்ட தொகுதிகளுக்கு பதிலாக வேறு தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு தர வழங்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கரூர் தொகுதியை பொறுத்தவரை கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர், திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. 

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஜோதிமணி வெற்றி பெற்று இருந்தார். 6,95,697 வாக்குகளை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பெற்ற நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்ட தம்பிதுரை 2,75,151 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். 

இருப்பினும் அம்மாவட்ட அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கும், ஜோதிமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் திமுக மாவட்ட செயலாளராக இருக்கும் செந்தில் பாலாஜி, ஜோதிமணிக்கு சீட் தர ஆதரவு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் காங்கிரஸ் தேசியத் தலைமை மூலம் கரூர் தொகுதியை மீண்டும் பெற ஜோதிமணி முயற்சித்து வருகிறாராம். 

இதனிடையே 9 மாதங்களுக்கு மேல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனுதாப ஓட்டுக்களை பெற அவரது மனைவி மேகலாவை திமுக வேட்பாளராக களமிறக்க அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

திமுகவின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலில் மேகலா செந்தில் பாலாஜி மற்றும் பாஸ்கர் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இன்றைய தினக் காங்கிரஸ், மதிமுக கட்சிகள் போட்டியிடும் இடங்கள் இறுதி செய்யப்பட்ட உடன் திமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

WhatsApp channel