CM MK Stalin: "பிரதமர் மோடிக்கு தான் தூக்கம் வரவில்லை"..திருச்சியில் அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்!
Trichy DMK Meeting: தன்னுடைய ஆட்சி முடியப் போகிறது என்பதால், பிரதமர் மோடிக்குதான் தூக்கம் வரவில்லை" என்று திருச்சியில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று (மார்ச் 22) பிரச்சாரத்தை தொடங்கினார்.
திருச்சி அருகே சிறுகனூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியது: "டெல்லி செங்கோட்டையை யார் கைப்பற்ற வேண்டும் என்று தீர்மானிக்க இந்த மலைக்கோட்டை மாநகரில் கடல்போல் திரண்டிருக்கும் தமிழ்ச் சொந்தங்களே.. திருச்சி என்றாலே திருப்புமுனை தான். இப்போது இந்தியாவுக்கே திருப்புமுனை ஏற்படுத்த நாம் திரண்டிருக்கிறோம். பல திருப்புமுனைகளை தமிழ்நாட்டுக்கு கொடுத்து, தமிழினத்தின் முன்னேற்றத்துக்காக தன்னுடைய வாழ்நாளெல்லாம் உழைத்த தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டுப் பரிசாக, ஒரு மகத்தான வெற்றியை கொடுப்பதற்கான துவக்கமாக இங்கு திரண்டிருக்கிறோம்.
வெற்றி என்றால் எப்படிப்பட்ட வெற்றி? நாற்பதுக்கு, நாற்பது. எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருப்பது இந்தத் திருச்சிதான். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் நிற்க வேண்டும் என்று 1956-ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது திருச்சி மாநாட்டில்தான். திருச்சி பாதை எப்போதுமே வெற்றிப் பாதை. அதன் அடையாளமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆறு முறை ஆட்சிப் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.