அவிநாசி அருகே துணீகரம்: மாவட்ட ஆட்சியரின் பெற்றோரை கட்டிப்போட்டு நகை கொள்ளை
Avinasi: தருமபுரி ஆட்சியரின் தாய் தந்தையை கட்டிப்போட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் பரபரப்பு
அவினாசி அருகே தருமபுரி மாவட்ட ஆட்சியரின் பெற்றோரை கட்டிப்போட்டுவிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மங்கரகூவளையபாளையம் ஊராட்சி லூர்துபுரம் பிள்ளையார் கோயில் உள்ளது. அப்பகுதியில் 86 வயது நிரம்பிய கிருஷ்ணசாமி மற்றும் 78 வயது நிரம்பிய சரஸ்வதி தம்பதியினர் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.
இந்த தம்பதியின் இளைய மகள் சாந்தி தருமபுரிமாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை தோட்டத்து வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்சியர் சாந்தியின் தந்தை கிருஷ்ணசாமியை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் தாய் சரஸ்வதியை சேலையால் கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் பணத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். கொள்ளையர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் கிருஷ்ண சாமி மனைவியை மீட்டுள்ளார். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து திருப்பூரில் உள்ள மகள்கள் மற்றும் மகனுக்கு தகவல் அளித்துள்ளார்.
இது குறித்து சேவூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியரின் பெற்றோரையே கட்டிப்போட்டு விட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்