OPS : மீனவர் உயிரிழப்பு - குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குக.. ஓபிஎஸ்!
கர்நாடக வனத்துறையின் செயல் கடும் கண்டனத்திற்குரியது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக கர்நாடக எல்லையில் உள்ளது பாலாறு வனப்பகுதி. இங்கு காவிரியும் பாலாறும் கலக்கும் இடத்தில் தமிழக மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்ற மீனவர்கள் பாலாற்றில் மீன் பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
பாலாற்றங்கரையில் இருந்த பரிசல்களையும் வலைகளையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில் சிலர் தப்பி கிராமங்களுக்கு சென்று விட்டனர். ஆனால் இந்த சம்பவத்தையடுத்து கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா மட்டும் காணாமல் போயிருந்தார்.
இதனால் கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூட்டில் அவர் பலியாகி இருக்கலாம் என கிராம மக்கள் பாலாற்றங்கரையில் தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவி வந்தது. இதற்கிடையே நேற்று காணாமல் போன மீனவர் ராஜா கர்நாடக எல்லையை ஒட்டிய அடிப்பாலாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர்,”தமிழக மீனவர் அன்புச் சகோதரர் ராஜாவை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத் துறையின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
ராஜாவின் உயிரிழப்பிற்கு காரணமான கர்நாடக வனத் துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனையை பெற்றுத் தர தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்