தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Mhc Ordered The Tn Police To Give Permission For Rss Rally On November 6

RSS rally: நவ.6-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி - உயர் நீதிமன்றம் உத்தரவு

Karthikeyan S HT Tamil
Sep 30, 2022 07:35 PM IST

அக்டோபர் 2ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகம் முழுவதும் அக்டோபா் 2ஆம் தேதி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஊர்வலம் நடத்திக்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் பிஎஃப்ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை காரணம்காட்டி, தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், ஜி. ராஜகோபாலன், என்.எல்.ராஜா ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.

ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஊர்வலத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பமாட்டோம் என உத்தரவாதம் அளித்த பிறகும் காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பதற்கான அர்த்தம் புரியவில்லை. இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்பதற்காகவே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என காவல்துறை கூறுகிறது. குறிப்பாக பிஎஃப்ஐ தடையை எதிர்த்து கடுமையான போராட்டம் நடைபெறும் கேரளா, புதுச்சேரியில் அனுமதி வழங்கபட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, என்.ஐ.ஏ., சோதனை, பி.எஃப்.ஐ., அமைப்பு மீதான தடை, பா.ஜ,க., மற்றும் ஆர்,எஸ்.எஸ்.,நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு ஆகியவற்றை கருத்தில் கொண்டு காவல்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில், மத்திய உளவுத்துறையின் அறிக்கைகளை புறந்தள்ளிவிட முடியாது. பொது மக்களின் நலன் தான் உச்சபட்ச முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு காவல்துறை செயல்படுகிறது என்று தெரிவித்தாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,வழக்கை விசாரித்த நீதிபதி தற்போதைய நிலவும் சூழல், காவல்துறை விளக்கம், மனுதாரர்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு மாற்று தேதியில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அறிவுறுத்தினார்.இதனை ஆர்.எஸ்.எஸ் தரப்பு ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

IPL_Entry_Point