Idol kidnapping case : சிலை கடத்தல் வழக்குகளில் விலகாத மர்மம் - மநீம கேள்வி!
பல கோடி மதிப்பிலான சிலைகளைக் கடத்தியவர்களையும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி, தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மநீம வலியுறுத்தியுள்ளது.

சென்னை : சிலை கடத்தல் வழக்குகளில் நிலவும் மர்மங்களை வெளிப்படுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”நூற்றாண்டுகள் பழமையான, பல கோடி மதிப்பு மிக்க, தமிழக கோயில்களுக்குச் சொந்தமான சிலைகள் கடத்தப்பட்ட வழக்குகளில் மர்மங்கள் தொடரும் நிலையில், முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலின் கேள்விகளும், குற்றச்சாட்டுகளும் திடுக்கிட வைக்கின்றன. உலகில் தொன்மையான சமூகம் தமிழ்ச் சமூகம். கலை, கலாச்சாரம், பண்பாட்டில் சிறந்து விளங்கிய தமிழர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சிற்பக் கலையிலும் சிறந்து விளங்கியுள்ளனர்.
தமிழகக் கோயில்களில் உள்ள மிகப் பழமையான, கலைநயமிக்க சிலைகளே இதற்கு சாட்சி. சோழர் காலத்துச் சிலைகள் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பழமையான சிலைகள் கோடிக்கணக்கில் மதிப்புடையவை. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கோயில்களைச் சேர்ந்த ஐம்பொன் சிலைகள் மற்றும் உலோகச் சிலைகள், கற்சிலைகள் ஆகியவை திருடப்படுவது பல்லாண்டுகளாக தொடர்கதையாகிவிட்டது. பல நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான, பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட சிலைகள் காட்சிப் பொருட்களாக உள்ளன.