Kamal Hassan: மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் ம.நீ.ம.! - கமல் முக்கிய ஆலோசனை
சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து விவாதித்து உள்ளோம் என்றும், ஆனால் இப்போது விவரிக்க முடியாது என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், யார் யாருடன் கூட்டணியில் தொடருவார்கள், 3-வது அணி அமையுமா போன்ற பேச்சுக்கள் இப்போதே அடிபடத் தொடங்கி விட்டன.
தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைவது உறுதி என்றும், அந்த கூட்டணியில் அமமுக இணையத் தயார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். எனினும் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் அமமுகவுக்கு ஒரு சதவீதம் கூட இடம் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
ஆளும் கட்சியான திமுகவும் மக்களவைத் தேர்தலில் முழு வெற்றியை பெற்று விட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது. இப்படி பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வரும் சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவிட்டது. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மாநில நிர்வாகிகளோடு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (நவ.16) ஆலோசனை நடத்தி உள்ளார்.