தமிழகத்தை உலுக்கிய பட்டாசு ஆலை வெடி விபத்து.. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!
CM Stalin: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமுத்தேவன்பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான வின்னர் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. இந்த ஆலையில் இன்று (பிப்.17) வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. அதோடு, தீப்பொறி மற்ற அறைகளுக்கும் வெடித்துச் சிதறியதால் அடுத்தடுத்த இருந்த 4 அறைகளிலும் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில், 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி, ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளர்.