Tenkasi: டார்ச் அடித்து ரயில் விபத்தை நிறுத்திய தம்பதி! அதிரடி வெகுமதியை அறிவித்த முதல்வர்! எவ்வளவு தெரியுமா?
”Tenkasi: தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் இரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து, இரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் இரயில் விபத்தை தடுத்துள்ளனர்”

தென்காசி அருகே ரயில் விபத்தை டார்ச் அடித்து தடுத்து நிறுத்திய முதிய தம்பதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுமதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியரை கிராமம், ‘எஸ்’-வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், 25-2-2024 அன்று நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை-கொல்லம் இரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.
அப்போது அப்பகுதியில் வசித்து வந்த தம்பதியர் திரு சண்முகையா – திருமதி வடக்குத்தியாள் தம்பதியினர் செங்கோட்டையில் இருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் இரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் இரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து, இரயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் இரயில் விபத்தை தடுத்துள்ளனர்.
