Edappadi Palanisamy : பிரதமர் 8 முறை வந்தும் பாஜக தோல்வி.. அதிமுக கூட்டணியில் நான் மட்டுமே பிரச்சாரம்-எடப்பாடி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Edappadi Palanisamy : பிரதமர் 8 முறை வந்தும் பாஜக தோல்வி.. அதிமுக கூட்டணியில் நான் மட்டுமே பிரச்சாரம்-எடப்பாடி

Edappadi Palanisamy : பிரதமர் 8 முறை வந்தும் பாஜக தோல்வி.. அதிமுக கூட்டணியில் நான் மட்டுமே பிரச்சாரம்-எடப்பாடி

Pandeeswari Gurusamy HT Tamil
Published Jun 08, 2024 12:25 PM IST

Edappadi Palanisamy : தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி 8 முறை வந்து பிரச்சாரம் மேற்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியதலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் ரோடு ஷோ நடத்தினார்கள் இருந்தும் பாஜக இங்கு வெற்றி பெறவில்லை என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பிரதமர் 8 முறை வந்தும் பாஜக தோல்வி.. அதிமுக கூட்டணியில் நான் மட்டுமே பிரச்சாரம்! எடப்பாடி
பிரதமர் 8 முறை வந்தும் பாஜக தோல்வி.. அதிமுக கூட்டணியில் நான் மட்டுமே பிரச்சாரம்! எடப்பாடி

எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது,

மோடி 8 முறை பிரச்சாரம்

"நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். மேலும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழகத்திற்கு வந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்கள். அதேபோல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர்மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்கள்.

காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் நடை பயணம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

நான் மட்டும் தான் பிரச்சாரம்

இதற்கிடையில் அதிமுக கூட்டணியை பொருத்தவரை நான் ஒருவன் தான் எங்கள் கட்சி வேட்பாளர்களையும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தேன். அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் அந்தந்த தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. 

அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி

இதற்கிடையில் அதிமுக கூட்டணிக்கு எதிராக பல தரப்புகளில் அவதூறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தனைக்கும் இடையில் அதிமுக இந்த தேர்தலை சந்தித்தது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட ஒரு சதவீதம் வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. அதை அதிமுகவுக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்ற கட்சிகளுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்கள் ஆனால் அதிமுக கூட்டணி எந்த ஆதரவும் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு கடன் முறை வாங்கிய வாக்குகளை விட இந்த முறை மக்களவைத் தேர்தலில் கூடுதலாக வாக்குகளை பெற்றிருக்கிறது" என தெரிவித்தார்

2019ஐ விட அதிக ஓட்டுக்கள் வாங்கிய அதிமுக

அதே நேரத்தில் அதிமுக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தலில் 18.48 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. இந்த முறை 20.46 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறது. இது கடந்த தேர்தலோடு ஒப்பிடும் போது, 2.06 சதவீதம் அதிகமாகும். இதில் மற்றொரு குறிப்பிடும் சாரம்சமும் உள்ளது.

கூட்டணி இல்லாமல் அதிமுகவின் வாக்கு சதவீதம் அதிகரிப்பு

கடந்த தேர்தலில் திமுக, தற்போதுள்ள இதே கூட்டணியுடன் தான் தேர்தலை சந்தித்தது. ஆனால், அதிமுக இந்த முறை பாஜக, பாமக, தமாக உள்ளிட்ட பல கூட்டணி கட்சிகள் இல்லாமல் போட்டியிட்டது. அப்போது அதிமுக உடன் ஓபிஎஸ் இருந்தார். இந்த முறை அவரது அணி என்கிற ஒரு தரப்பு பிரிவையும் அதிமுக சந்தித்தது. அத்தனையும் கடந்து அதிமுக இந்த முறை பெற்றிருக்கும் வாக்குகள், அபாரமானது தான் என்றாலும், வெற்றி இல்லை எனும் போது, அதை கொண்டாடவோ, தூக்கிப் பிடிக்கவோ இயலாத நிலையில் அதிமுக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9