Tirupati : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்.. பகல் 11 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி!
Tirupati Temple : இம்மாதம் 4ஆம் தேதி திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரமோற்சவம் துவங்கி நடைபெற இருப்பதால் அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமையான இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தால் திருப்பதி கோயில் எப்போதும் நிரம்பி வழிந்தபடியே காட்சியளிக்கிறது. குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.
வருடத்தில் நான்கு முறை திருமஞ்சனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர்களுக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை திருமஞ்சனம் என்று கூறுவது வழக்கம். அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருடத்தில் நான்கு முறை திருமஞ்சனம் (கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் நிகழ்ச்சி) நடத்தப்படுகிறது.
யுகாதி, வருடாந்திர பிரம்மோற்சவம், ஆனி வார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி ஆகிய திருநாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் நான்கு முறை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு திருமஞ்சனம் நடத்துவார்கள்.