தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த குற்றச்சாட்டில் ஹரியானாவை சேர்ந்த 4 பேர் கைது!
பணிக்கான நேர்முகத் தேர்வு , சான்றிதழ் சரி பார்ப்பின் போது, தேர்வு எழுதிய நான்கு பேரின் புகைப்படம் மற்றும் கை ரேகை ஆகியவை மாறுபட்டு இருந்தது தெரியவந்தது.
கோவையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்திற்கு நடைபெற்ற தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஹரியானா மாநிலத்தை சேந்த 4 பேர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் மரங்கள், செடிகள் குறித்தும், மர இனங்களை பெருக்குவது குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ப வளரும் செடிகள் மற்றும் பூச்சிகள் தாக்குதலில் இருந்து செடிகளை காப்பாற்றுவது, பூச்சிகளை கண்டறிதல் உட்பட பல்வேறு ஆய்வுகளை இங்குள்ள ஆய்வாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் இந்திய வனப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மரங்களின் தன்மையை கண்டறியும் வகையில் இங்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் இந்த அலுவலகத்தில் காலியாக உள்ள பல்திறன் பணியாளர்களுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நான்காம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தேர்வில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரி பார்ப்பு திங்கட்கிழமை நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதியவர்களில் 50க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் சான்றிதழ்கள் சரி பார்ப்பு நடை பெற்றது. இதில் பிப்ரவரியில் தேர்வு நடந்த போது 4 பேர் ஆள் மாறாட்டம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தேர்வு எழுத வந்தவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை ஆகியவை பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று இந்த பணிக்கான நேர்முகத் தேர்வு , சான்றிதழ் சரி பார்ப்பின் போது, தேர்வு எழுதிய நான்கு பேரின் புகைப்படம் மற்றும் கை ரேகை ஆகியவை மாறுபட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் நான்கு பேரையும் ஆங்கிலத்தில் எழுதுமாறும், சரளமாக பேசுமாறும் கூறினர். அவர்களால் பேசவும் எழுதவும் முடியவில்லை.
ஆனால் தேர்வில் இவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இதிலிருந்து இவர்கள் 4 பேரும் ஆள் மாறாட்டம் செய்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து
மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் குனிக்கண்ணன் இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் ஹரியானா மாநிலத்தை சார்ந்த அமித்குமார்,30 அமித்குமார் 26, அமித் 23, சுலேமான் 25 ஆகிய 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்த 4 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டாபிக்ஸ்