Sunil Gavaskar: ரிஸ்க் எடுத்தாதான் ரஸ்க் சாப்பிடமுடியும்...கவாஸ்கர் அட்வைஸ்
ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரை ப்ளேயிங் லெவனின் எடுக்கலாம் என்ற கேள்விக்கு பதில் அளித்த இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், கேப்டனும், அணி நிர்வாகமும் சில ரிஸ்குகளை எடுத்தால் மட்டுமே பலனை எதிர்பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இந்தியா அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தப் போட்டிகளில் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கு தயார்படுத்திக்கொள்ளும் விதமாக சிறந்த பயிற்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த இருதொடர்களிலும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் என்பதால், ஆட்டத்தில் களமிறங்கும் லெவனின் யாரை சேர்ப்பது என்பது மிகப் பெரிய புதிராகவே இருந்து வருகிறது.
இதுபற்றி இந்திய அணி கேப்டன், பயிற்சியாளர் முடிவை எடுத்திருந்தாலும், பண்ட், கார்த்திக் ஆகியோரில் யாரை அணியில் விளையாட வைக்கலாம் என முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இதுபற்றி பேட்டி ஒன்றில் கூறும்போது, "ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும். ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்ட், அடுத்த இரண்டு இடங்களில் தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா ஆகியோரை மாறிமாறி களமிறக்க வேண்டும்.
இவர்களை தொடர்ந்து வருபவர்கள் பௌலர்களாக மட்டுமே இருக்க வேண்டும். கூடுதலாக ஒரு பௌலரை சேர்க்கிறேன் பேர்வழி என்று ரன் குவிப்பில்தான் கோட்டைவிடுகிறோம். இந்திய அணியின் கேப்டன், பயிற்சியாளர் இருவரும் இதற்கான ரிஸ்க் எடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்
ரிஸ்க் எடுக்கவில்லை என்றால் எப்படி வெல்ல முடியும்? ஆகவே ரிஸ்க் அதற்கான பலனை பெற முடியும்" என்றார்.
ஜடேஜா காயம் காரணமாக அணியில் இல்லாத நிலையில் அவர் இடத்தில் அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு வாய்ப்பு அளிப்பதற்கு பதிலாக தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகிய இருவரையும் சேர்த்தாலே பேட்டிங் வரிசை பலப்படும்.
தற்போதைய இந்திய அணியில் ரிஷப் பண்ட், அக்ஷர் படேல் என இரண்டே இடது கை பேட்ஸ்மேன்கள் மட்டுமே உள்ளார்கள். இதன் காரணமாக இவர்களில் ஒருவரை அணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. அப்படிதான் ஆசிய கோப்பையில் காயம் காரணமாக வெளியேறிய ஜடேஜாவுக்கு பதில் வாய்ப்புகளை பெற்ற ரிஷப் பண்ட் சொல்லிக்கொள்ளும் விதமாக ஒரு இன்னிங்ஸும் ஆடவில்லை. மொத்தமாக 4 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் பேட் செய்த அவர் 51 ரன்கள் மட்டுமே எடுத்தார்.இதில் அவர் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.
இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இரு அணிகளுக்கு இடையே மொஹாலியில் இன்று நடைபெறுகிறது.
டாபிக்ஸ்