Asia Cup 2022: இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் மோதுகின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 போட்டியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில், இலங்கை அணி தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இறுதி ஆட்டத்தில் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது. இலங்கை அணியை பொறுத்தவரை குஷால் மெண்டிஸ், பதும் நிஷங்கா, தனுஷ்கா குணதிலகா, பனுகா ராஜபக்ச, கேப்டன் தசன் ஷனகா ஆகியோர் பேட்டிங் வரிசையில் முதல் 5 இடங்களில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் அணியை பொறுத்த வரையில் சூப்பர் 4 சுற்றில் அடைந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தக்கூடும். முகமது ரிஸ்வான், முகமது நவாஸ், நசீம் ஷா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.
ஆசிய கோப்பை போட்டியில் இதுவரை இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. எனவே இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
டாபிக்ஸ்