Food poisoning: கேரளாவில் ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 68 பேருக்கு உடல்நல பாதிப்பு
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பரவூரில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு உட்கொண்ட 68 பேர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டனர்.
இந்த 68 பேரில், சேரையைச் சேர்ந்த கீது என்ற பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்தச் சம்பவம் வெளியே தெரிய வந்ததும், நகராட்சி சுகாதார அதிகாரிகள், மஜ்லிஸ் என்ற அந்த ஹோட்டலை மூடினர்.
2 குழந்தைகள் உள்பட 28 பேர் பரவூர் தாலுக்கா மருத்துவமனையில் மற்ற 20 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குன்னுகரா எம்இஎஸ் கல்லூரியில் படித்துவந்த 9 மாணவர்களும் இந்த ஹோட்டலில் சாப்பிட்டதை அடுத்து வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர்.
குழிமதி, அல்ஃபகம், ஷவாய் ஆகிய மாமிச உணவுகளை சாப்பிட்டவர்களுக்குத்தான் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலத்தில் தொடர்ந்து உணவு நஞ்சாவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பது சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு துறைகளின் செயலற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் பேசினேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.
யாருடைய உடல்நிலை குறித்தும் பயப்பட ஒன்றுமில்லை என்பதுதான் தற்போதைய தகவல். உணவு நஞ்சானதால் ஹோட்டல் மூடப்பட்டுள்ளது. இப்பகுதியில் சோதனையை தீவிரப்படுத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் சதீஸன்.
மாநிலத்தில் பல உணவு நஞ்சு சம்பவங்களை அடுத்து, கேரள அரசு கடந்த வெள்ளிக்கிழமை கேட்டரிங் சேவைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, மாநிலத்தில் கேட்டரிங் சேவைகளுக்கான உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களுக்கு ஹெல்த் கார்டு கட்டாயம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.
முன்னதாக, ஜனவரி 4 ஆம் தேதி, கேரள அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை, மாநிலம் முழுவதும் 429 ஹோட்டல்களில் ஆய்வு நடத்தியது.
மதம் சார்ந்த நிகழ்வில் ஒரு பெண் ஃபுட் பாய்சனால் இறந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ரெய்டில் 43 ஹோட்டல்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.