Child Marriage: அயலியும்-அசாமும் ; குழந்தை திருமண கொடூரம் 2044 பேர் கைது
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை 2044 க்கும் மேற்பட்டோர் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்
அசாம் மாநிலத்தில் குழந்தை திருமண குற்றத்தில் தொடர்புடைய 2044 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா முதல்வராக உள்ளார். இந்நிலையில் அசாமில் தொடர்ந்து குழந்தை திருமணங்கள் நடத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குழந்தை திருமணம் குறித்த விவகாரத்தில் அம்மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு உரிய வயதிற்கு முன் திருமணம் செய்வதையும் கருத்தரிப்பதையும் தடுக்கும் விதமாக அம்மாநில அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. அந்த சட்டத்தின் படி 14 வயதுக்கு குறைவான பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது போஸ்கோ சட்டம் பாயும் என்றும் 14 முதல் 18 வயது உள்ள பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம் பாயும் என்று அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த புதிய உத்தரவின் பேரில் அசாம் காவல்துறை மாநிலம் முழுவதும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் 18 வயதுக்கு குறைவான பெண்களை திருமணம் செய்தவர்கள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை 2044 க்கும் மேற்பட்டோர் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த குழந்தைகளின் திருமணங்களை நடத்தி வைத்த புரோஹிதர்கள், இஸ்லாமிய மத குருக்கள் என 52 பேர், குழந்தை திருமணத்தில் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட 2,044 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம், போஸ்கோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பல தகவல்களை திரட்டி அதன் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 8,000 பேரின் பட்டியல் அசாம் காவல்துறையிடம் உள்ளதாகவும் அனைவரின் மீது கைது நடவடிக்கை பாயும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தரவுகளின் படி அசாமில் 20-24 வயதுடைய பெண்களில் 32 சதவீதம் பேருக்கு 18 வயதுக்கு குறைவாக இருக்கும் போது திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் 12 சதவீதம் பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே கருத்தரிப்புக்கு ஆளாகிறார்கள் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.
சமீபத்தில் zee 5 ல் வெளியான அயலி வெப் சீரிஸ் குறித்து பல்வேறு கருத்துகள் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வந்தது. அந்த பதிவு களின் கீழ் கமெண்டுகளில் இந்த குழந்தை திருமணம் எல்லாம் இப்போது கிடையாது. இது பெரும்பாலும் 30, 40 ஆண்டுகளுக்கு முந்தைய கதை என்று விமர்சித்தனர். ஆனால் தற்போது அசாமில் மேற்கொண்டுள்ள கைது நடவடிக்கை குழந்தை திருமணம் இப்போதும் சமூகத்தின் சவாலாகத்தான் உள்ளது என்பதை வெளிச்சமிட்டுக்காட்டி உள்ளது. அசாமில் பெரிய அளவில் அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளதால் அது பேசு பொருளாக மாறி உள்ளது அந்த வகையில் தொடர்ச்சியாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
டாபிக்ஸ்