Sambar Podi : கமகம நறுமணத்தில் சாம்பார் ருசிக்கணுமா? இப்டி பொடி செஞ்சு பாருங்க!
Sambar Podi : அள்ளும் சுவையில் சாம்பார் வேண்டுமா? அதற்கு இப்டி செஞ்சு பாருங்க சாம்பார் பொடி.
சாம்பார் தமிழர்களின் உணவில் அதிகம் பயன்படுத்தப்படுவது. காலையில் இட்லிக்கு, மதியம் சாதத்துக்கு, இரவு தோசைக்கு என மூன்று வேளையும் கூட தமிழர்கள் வீட்டு உணவில் சாம்பார் இருக்கும். சாம்பாருக்கு பல்வேறு ரெசிபிகளும், ஒவ்வொருவருக்கு ஏற்பவும், தனிநபர்களுக்கு ஏற்பவும் மாறுபடும்.
ட்ரெண்டிங் செய்திகள்
சாம்பார் பொடி சேர்த்து செய்வது, அரைத்துவிட்ட சாம்பார் என இரண்டு வகைகளில் தமிழகத்தில் பெரும்பாலான சாம்பார் செய்யப்படுகிறது. ஒரு சுவையான சாம்பார்தான் அந்த வேளை உணவை சுவையாக்குவதே. ஆனால், தமிழகத்தில் உப்பு சப்பில்லாத விஷயத்தை சாம்பார் என்று அழைப்பதே மக்களின் வழக்கமாக உள்ளது.
எனினும் சாம்பாரின்றி அமையாது தமிழர் உணவு என்பதால் சுவையாக சாம்பார் பொடியை வீட்டிலேயே அரைத்து வைத்துக்கொள்வது எப்படி என்று தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்.
வீட்டிலேயே சாம்பார் பொடி அரைக்க தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 1 கொத்து
மிளகு - 1 ஸ்பூன்
வர மல்லி - 4 ஸ்பூன்
விரலி மஞ்சள் - 1 சிறு துண்டு
வர மிளகாய் - 15
சீரகம் - 1 ஸ்பூன்
அரிசி - 2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
கடலை பருப்பு (chana dhal) - 2 ஸ்பூன்
ஓமம் - 1 சிட்டிகை
ஏலக்காய் -1
இவையனைத்தையும் குறைந்தது 3 நாட்கள் வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும். உலர்த்திய பின் ஒவ்வொன்றயும் தனித் தனியாக வாணலியில் கருகாமல் வறுத்து அது நன்கு ஆறிய பின் இதை பொடியாக அரைக்கவும்.
அரைத்த பொடியை சூடு ஆறவிட்டு இறுக மூடக்கூடிய டப்பா/பாட்டிலில் பொடியை போட்டு வைத்து பயன்படுத்த வேண்டும். வெயில் குறைந்த பனி அல்லது மழை காலத்தில் வீட்டிற்குள் வெயில் அடிக்கும் இடத்தில் வைத்து உலர்த்தவும் அப்படி செய்யும் போது 5 நாட்களாவது உலர்த்த வேண்டும்.
கம கம நறுமணத்தில் உங்கள் வீட்டு சாதா சாம்பார் ருசியான சாம்பாராக மாற இந்தப்பொடியை செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதை சாம்பாருடன் சேர்த்து சமைக்க உங்கள் வீட்டு சாம்பார் ஊரே மணக்கும் வகையில் இருக்கும்.
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம், ருசி 6.
டாபிக்ஸ்