தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Yejaman: If There Is A Man Like Vanavarayan, I Will Immediately Stretch My Neck-ejaman Fan Interest

Yejaman: வானவராயன் போல ஆண் இருந்தா உடனே கழுத்த நீட்டுறேன்-எஜமான் ரசிகை ஆர்வம்

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 18, 2023 10:01 AM IST

சார், நான் செல்வி. A.திலகவதி எழுதுகிறேன். எஜமான் வானவராயன் போல் ஆண் இருந்தால் சொல்லுங்கள். உடனே கழுத்தை நீட்டுகிறேன் சார். சீக்கிரம் சொல்லுங்கள். நான் திருமணம் செய்துக் கொண்டு திரும்பவும் முதலில் என் கணவனோடு பார்க்கும் படம் எஜமானாகத்தான் இருக்க வேண்டும்.

எஜமான்
எஜமான்

ட்ரெண்டிங் செய்திகள்

1993ம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெற்றி பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் உருவானது எஜமான் திரைப்படம். அன்புள்ள ரஜினிகாந்த படத்தில் ரஜினி அங்கிள் என்று அவருடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்த மீனா இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் நம்பியார்,நெப்போலியன், மனோரமா, ஐஸ்வர்யா, கவுண்டணி செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பரவின. ஆலப்போல் வேல போல், அடி ராக்கு முத்து ராக்கு போன்ற பாடல்கள் இல்லாத விஷேச வீடுகளே தமிழ்நாட்டில் இல்லை என்ற அளவிற்கு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.

அந்த நாட்களில் எஜமான் படத்தில் நடித்திருந்தவர்களின் உடை, நடிகர்களின் அங்க அசைவுகள் என அனைத்தும் ஏதோ பக்கத்து வீட்டில் வானவராயனும் வைதீஸ்வரியும் வாழ்வதை போன்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தி இருந்தது. வாழ்ந்தால் இப்படி ஒரு கணவன் மனைவியாக வாழ வேண்டும் என்ற ஒரு சித்திரத்தை அன்றைய இளம் தம்பதிகளிடம் உருவாக்கி வைத்திருந்தது.

அந்நிலையில் தான் வித்தியாசமாக யோசிக்க தொடங்கிய ஏவிஎம் சரவணன் ரசிகர்கள் கடிதம் மூலம் விமர்சனங்களை அனுப்பி வைக்கலாம் என்று அறிவித்தார். இதையடுத்து ஏராளமான கடிதங்கள் குவியத் தொடங்கின.

இந்நிலையில் எஜமான் படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பெண் ரசிகை ஒருவர் எழுதிய கடிதத்தை ஏவிஎம் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த கடிதம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.

அதில்,

வணக்கம்!

"சார், நான் செல்வி. A.திலகவதி எழுதுகிறேன். எஜமான் வானவராயன் போல் ஆண் இருந்தால் சொல்லுங்கள். உடனே கழுத்தை நீட்டுகிறேன் சார். சீக்கிரம் சொல்லுங்கள். நான் திருமணம் செய்துக் கொண்டு திரும்பவும் முதலில் என் கணவனோடு பார்க்கும் படம் எஜமானாகத்தான் இருக்க வேண்டும்.

வெள்ளித் திரையில் அழியா கதை படைத்துவிட்டு எனது நெஞ்சத்தில் எஜமான் வானவராயனை நிறுத்தி விட்ட திரு உதயகுமார் அவர்களுக்கு வைர கிரீடம் தான் சூட்ட வேண்டும் . இந்த கதையால் பலஎஜமான்கள் உருவாவது நிச்சயம். பல வைதீஸ்வரிகள் கண்ணீர் சிந்தாமல் வாழ்வது உறுதி.

நன்றி" என்று எழுதி உள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த கடிதத்தை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்நிலையில் 30 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த படம் குறித்த நினைவை ஏவிஎம் நிறுவனம் அந்த கடிதத்துடன் டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளது . அதில் அந்த பெண்ணின் கடிதத்தை புரமோஷனுக்காக பயன்படுத்த படக்குழு நினைத்தது. ஆனால் அதற்கு கடிதம் அனுப்பிய பெண்ணின் அனுமதி வேண்டி இருந்ததால் அவரது ஊருக்கே நாங்கள் சென்று கோரிக்கை வைத்தோம். ஆனால் தனது தந்தை என்ன நினைப்பாரோ என பயந்து தொடக்கத்தில் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அந்த பெண்ணின் தந்தை அந்த கடிதத்தை பயன்படுத்த ஒப்புக்கொண்டார். அதோடு அவரது புகைப்படத்தையும் கொடுத்தார். அந்த கடிதத்தை பயன்படுத்தி படக்குழு மேற்கொண்ட புரமோஷனுக்கு பலன் கிடைத்தது அதன் பின்னர் பல ஆண்கள் தாங்கள் எழுதிய கடிதத்தில் வைத்தீஸ்வரி போன்ற பெண் கிடைத்தால் உடனே திருமணம் செய்து கொள்வேன் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதினர். இந்த கடிதங்களின் தாக்கம் எஜமான் படத்தை பாக்ஸ் ஆபீஸி ஹிட் அடிக்க வைத்தது. படத்திற்கு ஜோடி ஜோடியாக கூட்டம் அலைமோதியது. இதுதான் உண்மையான ரசிகர்ளின் விமர்சனங்களின் பவர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த கடிதத்தை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.மேலும் இந்த கடிதத்தை சுமார் 1800க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்