வேட்டையனுக்கு கருத்து சொல்லப் போனவருக்கு வேட்டு வைத்த நெட்டிசன்கள்.. கருத்து சொன்னது குத்தமா?
வேட்டையன் திரைப்படம், நீட் குறித்து தான் பேசிய கருத்துகளை பேசியுள்ளது என சீமான் கூறியதைத் தொடர்ந்து, அவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஜெய் பீம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் த.செ. ஞானவேல். இவர் தனது முதல் படத்திலேயே பழங்குடி இன மக்கள் படும் துயர்கள் குறித்து பேசி தனது முத்திரையை பதித்திருந்தார். இந்நிலையில், நடிகர் ரஜினி காந்த், அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் போன்ற முன்னணி நடிகர்கள் கூட்டணியில் வேட்டையன் படத்தை இயக்கி வெளியிட்டார். கல்வி மாஃபியா, நீட் தேர்வு, கோச்சிங் நிறுவனம் குறித்தும், என்கவுண்டர் குறித்தும் படம் அழுத்தமாக பேசியிருந்த நிலையில், இந்தப் படத்தை பார்த்த நடிகர், இயக்குநர். அரசியல்வாதி என பன்முகத் தன்மை கொண்ட சீமான் பாரட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நான் பேசிய கருத்துகளை திரையில் பார்க்கிறேன்
அந்த அறிக்கையில், திரைக்கலை என்பது பொழுதுபோக்குவதற்கு அல்ல, நல்ல பொழுதாய் ஆக்குவதற்கு என்பதையும் தாண்டி, நாம் வாழும் சமூகத்தில் படர்ந்துள்ள பழுதை நீக்குவதற்கு என்பதை இத்திரைப்படம் மூலம் நிறுவியுள்ளார்கள்.
ஜெய்பீம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து அன்புத்தம்பி ஞானவேல் இத்திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்றறிந்தபோதே சமூகத்திற்கு நற்கருத்தைப் போதிக்கும் திரைப்படமாக வேட்டையன் வெளிவரும் என்று தம்பி தமிழ்க்குமரனிடம் தெரிவித்தேன். நான் எதிர்ப்பார்த்தது போலவே சமூக அக்கறை கொண்ட ஆகச்சிறந்த திரைப்படமாக வேட்டையன் வெளிவந்துள்ளது. நாட்டில் கல்வியின் பெயரால் நடைபெறும் கட்டணக் கொள்ளை குறித்தும், போலி மோதல் கொலைகள் (Fake Encounter) மூலம் நீதியும், மனிதமும் ஒருசேர கொல்லப்படுவது குறித்தும் தொடர்ச்சியாகப் பல மேடைகளில் நான் பேசி வந்த கருத்துகளைத் திரையில் கண்டது மிகுந்த பெருமிதமளிக்கிறது.