கமல்ஹாசன் உடன் மீண்டும் இணைய வாய்ப்பா..?.. எப்போது நடக்கும்.. - விழா மேடையில் ஓப்பனாக பேசிய லோகேஷ் கனகராஜ்
கமல்ஹாசனுடன் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார்

மாநகரம் திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த வெற்றியின் மூலம் விஜயுடன் மாஸ்டர் படத்தில் இணைந்த அவர், பின்னர் தன்னுடைய ஆதர்ச நாயகன் ஆன கமல்ஹாசனுடன் விக்ரம் திரைப்படத்தில் இணைந்தார்.
மாபெரும் வெற்றி
விஜய் சேதுபதி கமல்ஹாசன் பகத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலிலும் 300 கோடிக்கு மேல் கலெக்ஷன் செய்தது. இந்த திரைப்படத்தில் தன்னுடைய எல் சி யூ சினிமா யூனிவர்சையும் லோகேஷ் கனகராஜ் உருவாக்கினார். அதுவும் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய லியோ திரைப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. அதையெல்லாம் களையும் வகையில் தான் தற்போது அவர் ரஜினிகாந்த் உடன் இணைந்திருக்கும் கூலி படத்தை உருவாக்கி வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் பற்றி பேசினார் அப்போது அவர் பேசும் பொழுது கமல்ஹாசனை நேரில் பார்த்தால் போதும் என்பதே என்னுடைய கனவாக இருந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில், அவரை இயக்கும் வாய்ப்பே எனக்கு கிடைத்தது. அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். மீண்டும் நான் அவருடன் இணைய இருக்கிறேன். " என்று பேசினார். இதன் மூலமாக அவர் மீண்டும் விக்ரம் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் இணைய இருப்பது உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.