எம்ஜிஆர் முதல் விஜய் வரை அரசியலில் அடி எடுத்து வைத்த நடிகர்கள்! ஒரு பார்வை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எம்ஜிஆர் முதல் விஜய் வரை அரசியலில் அடி எடுத்து வைத்த நடிகர்கள்! ஒரு பார்வை!

எம்ஜிஆர் முதல் விஜய் வரை அரசியலில் அடி எடுத்து வைத்த நடிகர்கள்! ஒரு பார்வை!

Suguna Devi P HT Tamil
Published Oct 27, 2024 01:19 PM IST

சினிமாவில் இருந்து அரசியலுக்கு பல நடிகர்கள் வந்திருந்தாலும், ஒரு சிலரால் மட்டுமே ஆட்சி எனும் அரியணையில் ஏற முடிந்தது. அரசியலில் அடி எடுத்து வைத்த நடிகர்களின் பட்டியலை இங்கு காண்போம்.

எம்ஜிஆர் முதல் விஜய் வரை அரசியலில் அடி எடுத்து வைத்த நடிகர்கள்! ஒரு பார்வை!
எம்ஜிஆர் முதல் விஜய் வரை அரசியலில் அடி எடுத்து வைத்த நடிகர்கள்! ஒரு பார்வை!

எம்ஜிஆர்

காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய எம்ஜிஆர் அவர்கள் 1953ல் திமுகவில் ஐக்கியம் கொண்டார். அறிஞர் அண்ணா மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது படங்களில் அண்ணாவின் கருத்துகளையும் திமுகவின் கொடியையும் பயன்படுத்தி திமுகவின் கவர்ச்சி முகமாக அறியப்பட்டார். 1962ல் சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 1967 தேர்தலில் சட்டம் மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1969ல் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுகவின் பொருளாளராக பொறுப்பேற்ற எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் 1972 ல் திமுகவில் இருந்து விலக்கப்பட்டார். பின்பு தனது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1977-ல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் களம் கண்ட அதிமுக முதல் தேர்தலிலே பெரும்பான்மை இடங்களைப் பெற்று எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார். 1987 எம்ஜிஆர் மறைவு வரை திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா 

 எம்ஜிஆரின் நீட்சியாக ஜெயலலிதா திரைத்துறையில் இருந்து வந்து அக்கட்சியின் தலைமை பொறுப்பை கைப்பற்றி ஐந்து முறை முதலமைச்சராக தமிழ்நாட்டை ஆண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன் தனது அரசியல் வாழ்க்கையை திராவிடர் கழகத்தின் செயல்பாட்டாளராகத் தொடங்கினார். 1949 இல் அறிஞர் அண்ணாவால் திராவிட முன்னேற்றக் கழகம் நிறுவப்பட்ட பிறகு சிவாஜி அதில் சேர்ந்தார்.1956 வரை, அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். பின்பு சில முரண்பாடுகளால் தி.மு.க.வில் இருந்து விலகி, தி.மு.க.வின் முன்னாள் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சியில் இணைந்தார். பின்பு காங்கிரசுடன் இக்கட்சி இணைக்கப்பட்டது. அன்றைய காங்கிரஸ் தலைவர் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையைத் தழுவினார். பின்பு அந்தக் கட்சியிலிருந்து விலகி அவர் 1988 ல் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கினார்.

1989 தேர்தலில், அதிமுக ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்தது. அத்தேர்தலில் படுதோல்வியை அக்கூட்டணி சந்தித்தது. திருவாயாறு தொகுதியில் திமுக வேட்பாளர் துரை சந்திரசேகரனிடம் சிவாஜி படு தோல்வியடைந்தார். பின்னர் அவர் வி.பி. சிங்கின் ஜனதா தளத்தில் சேர்ந்தார். ஆனால் அவரது அரசியல் வாழ்க்கை 1993 இல் முடிவுக்கு வந்தது.

விஜயகாந்த்

2005 மதுரை மாநாட்டில் விஜயகாந்தால் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தொடங்கப்பட்டது. 2006 இல் கட்சியின் பலத்தை அறிய தனித்து களம் கண்ட தேமுதிக 10% வாக்கை பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்தால் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களை கைப்பற்றியது. திமுக எதிர்ப்பு அலை பரவலாக மக்களிடையே நீடித்ததால் அதிமுக ஆட்சியை கைப்பற்றியதுடன் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. பின்பு விஜயகாந்த் உடல்நிலை சரியத் தொடங்கியது முதல் அக்கட்சியின் நிலையும் சரியத் தொடங்கி இன்று வரை மீள முடியாத துயரமாக இருந்து வருகிறது.

கமல் ஹாசன்

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக  கமல்ஹாசன் திடீரென அரசியலுக்குள் நுழைந்தார். இடதுமல்லாது வலதும் அல்லாது ஒருவித குழப்பத்துடன் மையத்தில் பயணித்த கமலால் எலைட் மக்களை தவிர விஜயகாந்தை போல் தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்க முடியவில்லை. தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தார். ஆனால் மநீம கட்சிக்கு எந்த சீட்டும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சரத்குமார்

நள்ளிரவு 2 மணிக்கு வந்த திடீர் யோசனையால் பாஜகவில் தன் கட்சியை இணைத்த சரத்குமாருக்கு கட்சித் தாவல் முதல் தடவை இல்லை. திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி பின்பு அதிமுகவில் பயணித்து 2007 இல் சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சியை தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியில் வென்றும் இருக்கிறார். தற்போது கட்சியை பாஜகவுடன் இணைத்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் படுதோலி கண்டார்.

இது தவிர நவரச நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் அவர்களும் கட்சி தொடங்கி அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் 

தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல்வாதியாக மாறிய நடிகர்களில் எம்ஜிஆரால் மட்டுமே உச்சத்தை தொட முடிந்தது. 20 ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த பிறகே எம்ஜிஆர் கட்சி தொடங்கி முதலமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இந்த லிஸ்டில் இணைந்துள்ள நடிகர் விஜய் அவர்களும் என்று தனது கட்சியின் வெற்றிக் கொள்கையை பேசி மக்கள் மனதில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.