தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Sundar C:'கவலையை மறக்கடிக்கும் கலையை கற்றவன்' கமர்சியல் காக்டைல் சுந்தர் சி!

HBD Sundar C:'கவலையை மறக்கடிக்கும் கலையை கற்றவன்' கமர்சியல் காக்டைல் சுந்தர் சி!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 21, 2024 05:00 AM IST

இயக்குனர் மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பட துறையில் காலடி பதித்தார். குருவின் பாணியில் 1995ல் முறைமாமன் என்ற காமெடி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆனார். தனது திரைப்படங்களில் திரைக்கதை காட்சிகள் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்.

நடிகர் சுந்தர் சி பிறந்தநாள்
நடிகர் சுந்தர் சி பிறந்தநாள் (Actor Kayal Devaraj / twitter)

ட்ரெண்டிங் செய்திகள்

1968 ல் ஜனவரி 21 அன்று ஈரோடு நகரில் சிதம்பரம் பிள்ளை, தெய்வானை அம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். மகனுக்கு விநாயகர் சுந்தரவேல் என்று வைத்த பெயர் கால வளர்ச்சியில் திரைத்துறைக்கு ஏற்ப சுந்தர் சி. ஆகிப்போனார்.

இயக்குனர் மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பட துறையில் காலடி பதித்தார். குருவின் பாணியில் 1995ல் முறைமாமன் என்ற காமெடி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆனார். தனது திரைப்படங்களில் திரைக்கதை காட்சிகள் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர். 

ஹீரோவுக்காக கதை செய்வதில் விருப்பம் இல்லாதவர். காமெடி ட்ராக் தனியாக இல்லாமல் கதையின் ஓட்டத்தில் காமெடி இருக்கும் படி பார்த்து கொள்வார். காட்சிகள் எல்லாம் எப்போதும் கலகலப்பாக மகிழ்ச்சி ஆக இருக்கும் படி பார்த்து கொள்வார். தனது படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியோடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர். இதுதான் தமிழ் சினிமாவில் இவருடைய வெற்றிக்கான ரகசியம்.

தனது இளம் வயதிலேயே ரஜினிகாந்த் அவர்களின் அருணாச்சலம் படத்தை இயக்கி வெற்றி பெற்றார். இவர் இயக்கிய படங்களின் பட்டியலில் கமல்ஹாசன் மற்றும் மாதவன் நடிப்பில் அன்பே சிவம் என்ற கிளாசிக்கல் மூவியை இயக்கியிருப்பார். இந்த படத்தில் வரும் அத்தனை சீரியஸ் காட்சிகளில் கூட நகைச்சுவை இழையோடும் அழகே தனி.

1996ல் கார்த்திக் உடன் உள்ளத்தை அள்ளித்தா என்ற பெயரில் முழுவதும் நகைச்சுவை படத்தை எடுத்து அதிரிபுதிரியான வெற்றி பெற்றார். அந்த படத்தின் மூலம் நடிரக ரம்பாவிற்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவானது தொடர்ந்து கார்த்திக் உடன் மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக, சுயம்வரம், கண்ணன் வருவான் என்று ஐந்து படங்களில் பணியாற்றினார்.

அதேபோல் ரம்பாவை தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். 2003 ல் பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 2006ல் தலைநகரம் என்ற படத்தில் ஹீரோவாக இவர் நடித்தார். அது ஹீரோவாக முதல் படம். தொடர்ந்து ஆயுதம் செய்வோம், வீராப்பு,சண்டை, தலைநகரம், அரண்மனை என்று தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஆவிகள், பேய்கள் என திரில்லர் படங்களை விரும்புபவர்களுக்காக அரண்மனை 1,2,3, என்று வரிசையாக எடுத்தார். அந்த வகையில் அவர் இயக்கத்தில் கட்டி வைத்து மனிதர்களையும் பேய்களோடு நடமாட வைத்து கொண்டாடியவர். இவர் எடுத்த பேய் படம் நம்மை பயம் காட்டாமல் சிரிக்க வைக்கும் என்றால் பாருங்களேன். 

இன்னும் அரண்மனை 4 தயாராக உள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த கலகலப்பு 1,2.. என்று மனசுக்கு காமெடி வைத்தியம் செய்தவர். வடிவேலுக்கு கைப்புள்ள, நாய் சேகர், கிரேட் கரிகாலன் என்ற பெயரில் காமெடிக்கு புதிய ரூட் உருவாக்கி தந்தவர். வித்யா சாகர், இமான், ஹிப் பாப் ஆதி இசை அமைப்பாளர்களை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்.

பம்பாயில் பிறந்து தமிழில் பிரபல நடிகையான குஷ்பு அவர்களை 2000 ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். தன் மனைவியுடன் சேர்ந்து அவனி பிலிம்ஸ் நிறுவனம் என்ற பெயரில் படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நெடுந்தொடர்களை தயாரித்தும் இயக்கியும் வருகிறார்.

கவலையை மறக்கடிக்கும் கலையை கற்றுத் தேர்ந்த கமர்சியல் காக்டைல் சுந்தர் சி பிறந்தநாள் இன்று.. வாழ்த்துக்கள் சார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்