தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mahanadi Shankar: ‘காதல் தோல்வி: என் இளமையின் வலி’ -மகாநதி சங்கர் சங்கடம்!

Mahanadi Shankar: ‘காதல் தோல்வி: என் இளமையின் வலி’ -மகாநதி சங்கர் சங்கடம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 31, 2023 06:05 AM IST

‘நான், பொன்னம்பலம் , இந்தியன் பாஸ்கர், ராஜசேகர் எல்லாருமே ஒரு பேட்ஜ் தான். நாங்கள் எல்லாம் டூப் ஆர்டிஸ்ட். எங்களை ‘ஏ’ குரூப் என பிரிப்பார்கள்’ -மகாநதி சங்கர்!

நடிகர் மகாநதி சங்கர்
நடிகர் மகாநதி சங்கர்

ட்ரெண்டிங் செய்திகள்

‘‘1986ல் சாதாரண சண்டைக் கலைஞராக தான் சினிமாவில் அறிமுகமானேன். இன்று வரை என் பயணம் சினிமாவில் தொடர்கிறது. மகாநதிக்கு முன்பு, 7 ஆண்டுகள் சண்டைக் கலைஞராக தான் பணியாற்றினேன். அதை வைத்து தான், ‘ரிஸ்க் எடுப்பதெல்லாம், எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’ என்று கூறினேன். 

மகாநதியில் வாய்ப்பு கிடைத்ததற்கு காலமான விக்ரம் தர்மா மாஸ்டருக்கு தான் நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். அவர் என்னை ஓகே செய்துவிட்டு, பின்னர் சந்தான பாரதி சார் ஆபிஸிற்கு போனோம்.  அவருக்கும் பிடித்து விட்டது. அதன் பின்,  கமல் சாரிடம் அனுமதி வாங்க நேராக மகாநதி ஷூட்டிங் சென்றுவிட்டோம். 

அன்று தான் கமல் சாருக்கு பிறந்த நாள் வேறு. சார் என்னை அப்படியே பார்த்தார், ‘என்னை மாதிரி முடி வெட்டுங்க அவ்வளவு தான்’ என்று கூறி முடித்துவிட்டார். அப்புறம் அப்படியே நானும் இணைந்துவிட்டேன். 

நான் அப்போ 66 கிலோ இருந்தேன், என்னை உடம்பை ஏற்றுமாறு தர்மா மாஸ்டர் சொன்னார். 3 மாதம் இருந்தது, அதற்குள் 82 கிலோ ஏற்றிக் கொண்டு,  ஷூட் சென்றேன். அவங்க பார்த்ததும் ஓகே என்று விட்டார்கள். என் குரல், அதற்கு ஏற்றவாறு இருந்தது எனக்கு ஒரு ப்ளஸ். எனக்கு டப்பிங் பேச வேறு ஒருவரை ஏற்பாடு செய்த போது, கமல் சார் தான், ‘அவரை பேச வைங்க, அவர் ஸ்லாங் நல்லா இருக்கு’ என்று கூறினார். 

நான், பொன்னம்பலம் , இந்தியன் பாஸ்கர், ராஜசேகர் எல்லாருமே ஒரு பேட்ஜ் தான். நாங்கள் எல்லாம் டூப் ஆர்டிஸ்ட்.  எங்களை ‘ஏ’ குரூப் என பிரிப்பார்கள். தாஸ் மாஸ்டர், விஜயன் மாஸ்டர், ராஜூ மாஸ்டர், விக்ரம் தர்மா மாஸ்டர், இவர்கள் நான்கு பேரிடம் தான் நான் 7 ஆண்டுகளாக மாறி மாறி பணியாற்றினேன். 

மகாநதிக்கு பிறகு தான் மற்றவர்களிடம் பணியாற்றத் தொடங்கினேன். ஹீரோ இல்லை என்றால் எங்களுக்கு வேலை இல்லை. அதனால் ஹீரோக்களை நாங்கள் பூ மாதிரி பார்த்துக் கொள்வோம். ராசுக்குட்டி படத்தில் பாக்யராஜ் சாருக்கு டூப் போட்டு க்ளைமாக்ஸ் காட்சியில் தீயில் புகுந்த வர வேண்டும். நான் செய்த காட்சியை பார்த்து, ‘எனக்காக ஒருத்தன் சாகக் கூடாது’ என அங்கிருந்து பாக்யராஜ் சார் ஓடி விட்டார். தங்கமான நடிகர் அவர். 

ஆக்‌ஷனில் இருந்து அப்படியே நேர்எதிர் காமெடிக்கு வந்துட்டேன். அதற்கு செல்வா சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். முதலில் கோல்மால் படத்தில் தான் காமெடியனானேன். 

லவ் இல்லாத இளம் பருவம் இருக்குமா? எல்லாரும் அந்த வயதை கடந்து தானே வருவோம். எனக்கு இளம் வயதில் ஆசை இருந்திருக்கிறது. என்னை பார்த்தாலே பெண்கள் திரும்பிவிடுவார்கள். சுமாராக இருக்கும் பெண்கள் கூட என்னை பார்த்து திரும்பிவிடுவார்கள். 

சிலம்பம், பாக்சிஸ் எல்லாவற்றிலும் நான் முதல் பரிசு பெறுவேன். எல்லாவற்றிலும் நான் தான் நம்பர் 1, ஆனால் என் வாழ்க்கையில் லவ் என்பதே கிடைக்காமல் போனதில் நான் தோல்வியடைந்தவன். அந்த வயது போனது, போனது தான். நான் வருத்தப்பட்டது வருத்தப்பட்டது தான், அந்த வருத்தத்தை இனி தீர்க்க முடியாது,’’

என்று அந்த பேட்டியில் மகாநதி சங்கர் கூறியுள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்