தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  33 Years Of Engal Swamy Ayyappan: ‘5 ஐயப்பப் பக்தர்களின் கதைகளுடன் சுவாமி ஐயப்பனின் அற்புதங்களை விளக்கிய படம்’

33 Years of Engal Swamy Ayyappan: ‘5 ஐயப்பப் பக்தர்களின் கதைகளுடன் சுவாமி ஐயப்பனின் அற்புதங்களை விளக்கிய படம்’

Manigandan K T HT Tamil
Dec 28, 2023 05:00 AM IST

சபரிமலைக்கு செல்லும்வழியில் அவருடைய உடைமைகள் திருடுபோகிறது. ஐயப்பனை மனமுருகி வேண்ட அவரின் உடைமைகள் ஒரு யானையின் மூலம் திரும்பக் கிடைக்கிறது.

எங்கள் சாமி ஐயப்பன்
எங்கள் சாமி ஐயப்பன்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு ஐயப்பனின் பக்தன் ஐயப்பனின் அற்புதங்களை மற்ற பக்தர்களிடம் ஐந்து விதமான கதைகளைச் சொல்கிறார். 

முதல் கதை: ஐயப்ப பக்தரான ராஜசுவாமி (ஹரிராஜ்) தனக்கு வேலை கிடைத்தால் சபரிமலைக்கு வருவதாக ஐய்யப்பனிடம் வேண்டுகிறார். அவருக்கு வாகன ஓட்டுநராக வேலை கிடைக்கிறது. அவரது முதலாளி (மலேசியா வாசுதேவன்) ராஜசுவாமி ஏழை என்பதால் அவரை அடிக்கடி அவமானப்படுத்துகிறார். ராஜசுவாமியும் அவரது முதலாளியும் ஒரே நாளில் பூஜைக்கு ஏற்பாடு செய்கின்றனர். முதலாளி வீட்டுக்கு மாறுவேடத்தில் சிறுவனாக வரும் ஐயப்பனை விரட்டிவிடுகிறார். அங்கிருந்து ராஜசுவாமி வீட்டுக்குவரும் சிறுவனை வரவேற்று உபசரிகிறார் ராஜசுவாமி. ஐயப்பனின் மனம் மகிழ்ந்து ராஜசுவாமிக்கு அருள்புரிகிறார். அவரது முதலாளியை மன்னிக்கிறார்.

இரண்டாவது கதை: சுவாமி (ஆனந்த் பாபு) சபரிமலைக்கு செல்லும்வழியில் அவருடைய உடைமைகள் திருடுபோகிறது. ஐயப்பனை மனமுருகி வேண்ட அவரின் உடைமைகள் ஒரு யானையின் மூலம் திரும்பக் கிடைக்கிறது.

மூன்றாவது கதை: பாஸ்கரசுவாமி (திலீப்) ஐயப்பனுக்கு விரதமிருந்து மாலை அணிவதால் சைவ உணவுமுறையைப் பின்பற்றுகிறார். அவரது வீட்டுக்கு அருகில் இருக்கும் சரசு அசைவ உணவை சமைத்து பாஸ்கருக்கு இடையூறு தருகிறார். ஐயப்பன் சரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்கிறார். சரசு பாசகரிடம் மன்னிப்பு கேட்கிறாள்.

நான்காவது கதை: பிரசாந்த் சுவாமியின் மனைவி கௌரி (கோகிலா) மற்றும் மகள் சவும்யா. அவர் ஒரு கொலை வழக்கில் சாட்சி கூறி குற்றவாளியை சிறைக்கு அனுப்புகிறார். அவனால் பாதிக்கப்படும் குற்றவாளியின் நண்பர்கள் அவனது மகளைக் கடத்த திட்டமிடுகின்றனர். பிரசாந்த்சாமியின் கனவில் வந்து எச்சரிக்கும் ஐயப்பன் அவரையும் அவர் மகளையும் சபரிமலைக்கு வரச் சொல்கிறார். சபரிமலையில் தொலைந்துபோகும் சவும்யாவை சலீம் பாய் (நாகேஷ்) பத்திரமாக தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். சவும்யாவைத் தேடிவரும் எதிரிகள் அங்குவந்து சவும்யாவையும் சலீம்பாயின் பேரனையும் அடித்து விடுகின்றனர். படுகாயமுற்ற இருவரையும் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அங்குவரும் ஒரு கிறிஸ்தவர் குருதிக்கொடையளித்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.

ஐந்தாவது கதை: வாசுசுவாமி (பார்த்திபன்) சபரிமலைக்கு சென்று வீட்டுக்கு வருகிறார். அவருடைய தந்தை இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வாசுவையும் அவன் தாயையும் வீட்டைவிட்டு விரட்டுகிறார். வீட்டை விட்டு வெளியேறிய வாசுவை ஒருநாள் காவல்துறை கைது செய்கிறது. அவனது அப்பாவைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஐயப்பன் அருளால் உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட வாசு விடுதலையாகிறான்.

இவ்வாறாக 5 மாறுபட்ட கதைகளை காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் தசரதன். கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். நாகேஷ், குள்ளமணி, மாதுரி, பார்த்திபன் என நடிப்புப் பட்டாளங்கள் நிறைந்த இந்தப்படம் இப்போது பார்த்தாலும் பக்தி பரவசம் ஏற்படும்.

ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் இந்தக் காலத்தில் இந்தப் படத்தை கட்டாயம் பார்க்கலாம். இந்தப் படம் வெளிவந்து 33 வருடங்கள் ஆகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்