Ind vs Eng Result: பழிதீர்த்த இந்தியா! 10 ஆண்டுகளுக்கு பிறகு பைனலுக்கு தகுதி! பேட்டிங், பவுலிங்கில் கலக்கல் ஆட்டம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Eng Result: பழிதீர்த்த இந்தியா! 10 ஆண்டுகளுக்கு பிறகு பைனலுக்கு தகுதி! பேட்டிங், பவுலிங்கில் கலக்கல் ஆட்டம்

Ind vs Eng Result: பழிதீர்த்த இந்தியா! 10 ஆண்டுகளுக்கு பிறகு பைனலுக்கு தகுதி! பேட்டிங், பவுலிங்கில் கலக்கல் ஆட்டம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 28, 2024 01:37 AM IST

கடந்த 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்ற தோல்விக்கு தற்போது இந்தியா பழி தீர்த்துள்ளது. பேட்டிங், பவுலிங் என கலக்கல் ஆட்டம் வெளிப்படுத்திய இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு பைனலில் நுழைந்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு பைனலுக்கு தகுதி, பேட்டிங், பவுலிங்கில் கலக்கல் ஆட்டம்
10 ஆண்டுகளுக்கு பிறகு பைனலுக்கு தகுதி, பேட்டிங், பவுலிங்கில் கலக்கல் ஆட்டம் (AP)

இந்தியா பவுலிங்

மழையால் மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதற்கு சுமார் ஒன்றரை மணி நேரம் வரை தாமதமானது. இதன்பின்னர் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் இந்த போட்டியில் களமிறங்கியது.

முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 57, சூர்யகுமார் யாதவ் 47, ஹர்திக் பாண்ட்யா 23 ரன்கள் அடித்தனர்.

இங்கிலாந்து பவுலர்களில் கிறிஸ் ஜோர்டன் 2, ரீஸ் டாப்லே, ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கரன், அடில் ரஷித், ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இங்கிலாந்து சேஸிங்

பேட்டிங் செய்வதற்கு சற்று கடினமாக இருந்த பிட்சில் 172 என்ற சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து 16.4 ஓவரில் 103 ரன்கள் அடித்து ஆல்அவுட்டாகியுள்ளது. இதனால் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டி20 உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 23, ஜோஸ் பட்லர் 23, ஜோப்ரா ஆர்ச்சர் 21 ரன்கள் அடித்தனர். இந்திய பவுலர்களில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

23 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகள் எடுத்த அக்சர் படேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

10 ஆண்டுகளுக்கு பிறகு பைனலில் இந்தியா

கடைசியாக 2014இல் வங்தேசத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்தியா, இலங்கைக்கு எதிராக தோல்வியை தழுவி ரன்னர் அப் ஆனது. இதன் பின்னர் தற்போது 10 ஆண்டுகள் கழித்து இறுதிப்போட்டியில் விளையாட இருக்கிறது.

அதேபோல், கடந்த 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்ற தோல்விக்கு தற்போது இந்தியா பழி தீர்த்துள்ளது

சீட்டுக்கட்டு போல் சரிந்த இங்கிலாந்து

தொடக்கம் முதல் அதிரடியாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட முயற்சித்து, தவறான ஷாட்களால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டு போல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

பவர்ப்ளே முடிவிலேயே டாப் 3 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னரும் பார்ட்னர்ஷிப் அமையாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 

இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத அணிகளாக இருந்து வரும் இந்தியா, தென் ஆப்பரிக்கா அணிகள் வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.