IND vs AFG 3rd T20I: வீறுகொண்ட எழுந்த ரோஹித்! கடைசி ஓவரில் சிக்ஸர் மழை - ஆப்கானிஸ்தானுக்கு இமாலய இலக்கு
IND vs AFG 3rd T20I Innings Break: பார்மில் இருக்கும் துபே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சஞ்சு சாம்சனும் முதல் பந்திலேயே நடையை கட்டினார். முதல் இரண்டு போட்டியில் சொதப்பிய ரோஹித் வீறுகொண்டு எழுந்த நிலையில், கோலி இன்று டக்அவுட்டானார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி பெங்களுருவிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இரண்டு போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றிய ரோஹித் ஷர்மா இன்று வீறுகொண்டு எழுந்தார். முதலில் பொறுமையாக பேட் செய்த அவர் பின்னர் கியரை மாற்றி அதிரடிக்கு மாறினார். அவர் 121 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.
பந்தை பவுண்டரி, சிக்ஸர்கள் என விளாசிய ரோஹித் ஷர்மா 64 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இது டி20 போட்டியில் அவர் அடித்திருக்கும் ஐந்தாவது சதமாகவும், டி20 போட்டிகளில் அடித்திருக்கும் அதிகபட்ச ஸ்கோராகவும் அமைந்துள்ளது. தனது இன்னிங்ஸில் 69 பந்துகளில் 121 ரன்கள் எடுத்திருப்பதோடு, 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களை அடித்துள்ளார்.