Ganga Vilas cruise ship:பிகாரில் பாதி வழியில் சிக்கி கொண்ட கங்கா விலாஸ் கப்பல்?
பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க கடந்த 13ஆம் தேதி 51 நாள் பயணத்தை தொடங்கிய கங்கா விலாஸ் கப்பல் மூன்றாவது நாளில் பிகார் அருகே சிக்கிக்கொண்டு நின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பிகார் மாநிலம் சாப்ரா நகரின் அருகே டோரிகஞ்ச் பகுதியில் கப்பல் செல்வதற்கு ஏற்ப போதுமான ஆழத்தில் நீர் இருப்பு இல்லாததன் காரணமாக பாதியிலேயே சிக்கியுள்ளது கூறப்படுகிறது. இதன்பின்னர் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு கப்பலில் தவித்து வந்த சுற்றுலா பயணிகளை சிறிய படகுகள் மூலம் பத்திரமாக மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதற்கு கப்பல் ஆப்பரேட்டர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். எம்வி கங்கா விலாஸ் கப்பல் திட்டமிட்டபடி பயணத்தை தொடர்ந்து பாட்னா சென்றடைந்து இருப்பதாகவும், சாப்ரா நகர் அருகே சிக்கிக்கொள்ளவில்லை எனவும் இந்திய உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் சஞ்சய் பந்தோபாத்யாய விளக்கம் அளித்துள்ளார். ஐந்து நட்சத்திர கப்பலான எம்வி கங்காஸ் வாரணாசி முதல் வங்கதேசம் வழியாக அஸ்ஸாம் மாநிலம் திப்ருகா வரை பயணம் மேற்கொள்கிறது. 10 சூட்கள் கொண்ட ட்ரிபிள் டெக் கப்பலான இதில் 80 பேர் பயணிக்கலாம். மொத்தமாக உள்ள 51 நாள் பயணத்தில் 15 நாள்கள் இந்தக் கப்பல் வங்கதேசத்தில் பயணிக்கும். இந்தியாவில் 5 மாநிலங்கள் வழியே 3,200 கிலோ மீட்டர் இந்த கப்பல் செல்கிறது. உலகின் மிக நீண்ட ஆற்று வழி பயணத்தை மேற்கொள்ளும் கப்பல் என்ற பெருமையை கங்கா விலாஸ் பெற்றுள்ளது.