Tirumavalavan: பதற்றம் ஏற்படுத்த முயற்சி! ஆம்ஸ்ட்ராங், ஆருத்ரா கோல்டு, பாஜக குறித்து விசாரணை தேவை - திருமாவளவன் பேட்டி
Tirumavalavan Meets CM Stalin: திமுக அரசுக்கு எதிராக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும், சட்ட ஒழுங்கை சீர் குலைக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங், ஆருத்ரா கோல்டு, பாஜக குறித்து விசாரணை தேவை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் விசிக தலைவர் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர், "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக உள்ளிட்ட கட்சிகள் முயற்சி செய்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் செயல் திட்டம் இருப்பதாக சந்தேகம் வருகிறது. இதனை நடைமுறைப்படுத்திய கூலிக்கும்பல் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரம்
ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சில நிமிடங்களில், பாஜகவை சேர்ந்த ஒருவர் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். காவல்துறை நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாகவே, பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைப்பதற்கு முன்னதாகவே, எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசு விசாரிக்கக் கூடாது, ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் இருக்கக்கூடிய சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாஜகவின் குரலாக இருந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது. ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் பாஜகவில் பொறுப்புகளில் உள்ளனர். பாஜக இதில் வலிந்து தலையிட்டு சிபிஐ விசாரணை கோருகிறது. இவையெல்லாம் புலனாய்வு விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவை. அவர்களின் செயல் திட்டம் என்பது திமுக அரசுக்கு எதிராக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும், சட்ட ஒழுங்கை சீர் குலைக்க வேண்டும் என்பதாக தான் இருக்கிறது.
