பட்டியலின சகோதரர்களைப் பாதுகாப்பேன்.. அசம்பாவிதம் நிகழ்ந்தால் சந்திக்கும்விதத்தில் சந்திப்பேன்.. சவால்விட்ட தேவரின் கதை
பட்டியலின சகோதரர்களைப் பாதுகாப்பேன்.. அசம்பாவிதம் நிகழ்ந்தால் சந்திக்கும்விதத்தில் சந்திப்பேன்.. சவால்விட்ட தேவரின் கதையை, பசும்பொன் முத்துராமலிங்கனாரின் ஜெயந்திநாளில் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் எண்ணற்ற தலைவர்கள் தோன்றியிருக்கலாம். எண்ணற்ற தலைவர்கள் மறைந்து இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் வாக்கு வங்கி அரசியல் நிலைப்பாட்டை தேவரின்றி யாரும் நிகழ்த்திக் காட்டமுடியாது. அவர் உயிரோடு இருந்தாலும் சரி, உயிரோடு இல்லை என்றாலும் சரி, அதுதான் இன்றும் யதார்த்த நிலைப்பாடு. முத்துராமலிங்கத் தேவர், சாதியால் நிகழ்ந்த ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கும் சுதந்திரப் போராட்டத்தியாகி. சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியப் பணிகளை அலங்கரித்து மக்களுக்கு நல்சேவையாற்றிய ஒரு வள்ளல்.
யார் இந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்? தமிழ்நாட்டில் ராமநாதபுரத்து மாவட்டத்தில் பசும்பொன் என்னும் கிராமத்தில் உக்கிரபாண்டி தேவருக்கும், இந்திராணி அம்மையாருக்கும் அக்டோபர் 30,1908ஆம் ஆண்டு ஒரே மகனாகப் பிறந்தவர். மிகுந்த வசதி வாய்ந்த குடும்பத்தில் பிறந்தாலும் இவர் தனது ஒரு வயதில் தாயை இழந்து தாய்ப்பாசத்திற்கு ஏங்கினார். பெரியதாயார் மீனலோசனி அம்மாவும், இஸ்லாமிய நட்புக்குடும்பத்தைச் சார்ந்த பெண்ணாலும் வளர்க்கப்பட்டார்.
பள்ளிப்படிப்பு:
தனது சிறுவயதில் குழந்தைசாமி பிள்ளை என்னும் நபரிடமும் பின், கமுதியில் உள்ள கிறிஸ்தவ பள்ளியிலும் பயின்ற பசும்பொன் தேவர், பின்னர் மதுரை - பசுமலை மேல்நிலைப்பள்ளியிலும், யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை படித்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, 1924ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆரோக்கியக் குறைபாட்டால் பள்ளிசென்று முத்துராமலிங்கத்தேவரால் படிக்கமுடியவில்லை.