CM MK Stalin: மீனவர்கள் கைது விவகாரம்..மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய கடிதம்!
CM MK Stalin: மீனவர்கள் விஷயத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தை உடனடியாக நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “செவ்வாய் (ஜூன் 25) அன்று IND-TN-12-MM-5138 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2024-ம் ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் இதுவரை 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது, தமிழகத்தின் மீனவ சமுதாயத்தினரிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.