தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  100 Years Of Kalaignar: ‘தலைவா விஜய் முதல் கபாலி டிக்கெட் வரை!’ சம்பவம் செய்த கலைஞரின் ’பஞ்ச்’ பதில்கள்!

100 Years of Kalaignar: ‘தலைவா விஜய் முதல் கபாலி டிக்கெட் வரை!’ சம்பவம் செய்த கலைஞரின் ’பஞ்ச்’ பதில்கள்!

Kathiravan V HT Tamil
Jun 03, 2023 06:20 AM IST

கேள்வி: மதிமுகவை உடைக்க சதி நடப்பதாக வைகோ பேசி உள்ளாரே?பதில்: ”ஆமாம். உண்மைதான்; அந்த சதியை செய்ய அவர் ஒருவரே போதாதா?”

முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் செய்தியாளர் சந்திப்பு - கோப்புப்படம்
முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் செய்தியாளர் சந்திப்பு - கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

துன்பம் வரும் வேளையும் சிரிக்கும் குணமே 95 வயது வரை கலைஞர் வாழ காரணம் என உடன்பிறப்புகள் கூறும் நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கலைஞர் கருணாநிதி அளித்த ‘பஞ்ச்’ பதில்கள் இதோ...!

கேள்வி: பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா ?

பதில்: ’’போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை.’’

கேள்வி: புலிகள் மீண்டும் போராடினால் 'டெசோ' ஆதரிக்குமா?

பதில்: ’’ஜனநாயக வழியில் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம்’’.

கேள்வி: ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று மத்திய அமை‌ச்ச‌ர் அந்தோணி சொன்னாரா?

பதில்: ’’என்னிடம் சொன்னார்; ஆனால் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார்.’’

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி

கேள்வி: நீங்கள் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்?

பதில்: ’’நல்ல ஜனாதிபதி வர வேண்டும் என விரும்புகிறேன்...!”

கேள்வி: அம்மையார் ஜெயலலிதா சென்னையில் அமர்ந்துகொண்டே காணொலிக் காட்சி மூலம் தமிழகமெங்கும் கட்டடங்களைத் திறந்து வைக்கிறாரே?

பதில்: “ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு சொர்க்கவாசலைத் திறந்துவிட்டோம் என்கிறார்களே... அதுபோல நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்!”

கேள்வி: திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என துக்ளக் ஆசிரியர் சோ பேசி உள்ளாரே?

பதில்: ”மதுவகைகள் தயாரிக்கும் மிடாஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் வேறு எப்படி பேசுவார்?”

கேள்வி: மதிமுகவை உடைக்க சதி நடப்பதாக வைகோ பேசி உள்ளாரே?

பதில்: ”ஆமாம். உண்மைதான்; அந்த சதியை செய்ய அவர் ஒருவரே போதாதா?”

கேள்வி: முதல்வர் ஜெயலலிதா அன்றாடம் 110-வது விதியின்கீழ் பேரவையில் அறிக்கை படித்தவுடன் அமைச்சர்களும் அப்படியே பாராட்டு வழங்க ஆரம்பித்துள்ளார்களே ?

பதில்: ”மழை பொழிகிறதோ இல்லையோ; இந்தப் பாராட்டு மழைதான் சட்டப்பேரவையில் அ.தி.மு.க. ஆட்சியில் அன்றாடம் பெய்து கொண்டிருக்கிறது!”

கேள்வி: ஜெயலலிதா ஆட்சியில்தான் திரைப்படத் துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது என்று பேரவையில் அந்தத் துறையின் அமைச்சர் பேசியிருக்கிறாரே?

பதில்: ”இந்தப் பேச்சுக்கு உதாரணமாக நடிகர் கமல்ஹாசன் நடித்த "விஸ்வரூபம்" - நடிகர் விஜய் நடித்த "தலைவா" படங்களைக் கூறலாம்!”

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

கேள்வி: கடலாடியில் 1,500 கோடி ரூபாயில் கடல் நீரைச் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கப் படும் என்று 110 விதியில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?

பதில்: ”110வது விதி என்பதற்கு பதிலாக 111 என்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்!”

கேள்வி: சமஸ்கிருத வாரம் தமிழகத்திலே கொண்டாடுவதற்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தது பற்றி?

பதில்: ”வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள புலிக் குட்டிகளுக்கு தாரா, மீரா, பீமா, நர்மதா, அனு என்றும், திருவரங்கத்தில் "யாத்ரி நிவாஸ்" என்றும் சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டியது தான் நினைவுக்கு வருகிறது.”

’கபாலி’ திரைப்படத்திற்கு 10 டிக்கெட்டுகள் அனுப்ப வேண்டுமென்று கடிதம் அனுப்பிய அமைச்சரின் உதவியாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டாராமே?

படத்திற்கு டிக்கெட் கேட்டு கடிதம் அனுப்பியதற்காக என்னை பணியிலிருந்து நீக்கி விட்டார்களே, அந்தப் படத்தைத் திரையிடும் உரிமையை முதல் அமைச்சரின் வீட்டிலேயே தங்கியிருக்கும் ஒருவர் (ஜாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்) பெற்று, கோடிக்கணக்கிலே இலாபம் அடைகிறாரே, அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாதா என்று அந்த உதவியாளர் கேட்காமல், கேட்கிறாராம்!

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்