Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மே 15-ல் விசாரிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!
Senthil Balaji Case, Supreme Court: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ஜாமீன் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது பதில் மனுத்தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அமலாக்கத்துறை சார்பில் கடந்த 29ஆம் தேதி பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏவாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.