தாயின் ஆசையை நிறைவேற்ற மகன் செய்த செயல் - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
ஜார்க்கண்டில் தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக தாயின் சடலத்தை வீட்டில் வைத்து விட்டு கோயிலில் மகன் திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட்: தான்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓம் குமார் தூரி. இவரது தாயாரான பைஜ்நாத் தூரி காலமாகிவிட்டார். ஆனால் தனக்கு இறுதிச்சடங்கு செய்யும் முன் மகன் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்பது அந்த தாயின் கடைசி ஆசை.
இதையடுத்து தாயின் ஆசையை நிறைவேற்ற ஓம்குமார் தூரி வீட்டில் தாயின் சடலத்தை வைத்து விட்டு கோயிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் மனைவியுடன் வீட்டுக்கு வந்து தாயின் பாதத்தை வணங்கிய பின்னரே இறுதிச்சடங்குகள் தொடங்கின.
ஓம்குமாருக்கும் சரோஜ் என்ற பெண்ணுக்கும் வரும் 10ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக ஏற்கெனவே ஆடம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஓம்குமாரின் தாய் திடீரென கடந்த வியாழனன்று காலமானார்.
எனினும் தாயின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த ஓம்குமார், அருகிலுள்ள சிவன் கோயிலில் எளிமையான முறையில் உடனடியாக திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னரே மணமக்கள் வீட்டுக்கு வந்த பின்னர் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

டாபிக்ஸ்