தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Liquor Bottle Provided With Tambula Bag In Wedding Reception At Puducherry

Viral Wedding: தாம்பூலப் பையில் குவார்ட்டர் பாட்டில்..குஷியில் மதுப்பிரியர்கள்..இது வேற லெவல் கல்யாணம்

Karthikeyan S HT Tamil
Jun 01, 2023 03:05 PM IST

Puducherry Wedding: திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் குவார்ட்டர் பாட்டில் போட்டுக்கொடுத்த திருமண வீட்டாரால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தாம்பூலப் பையுடன் குவார்ட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தாம்பூலப் பையுடன் குவார்ட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

பொதுவாக திருமண நிகழ்ச்சி என்றால் பத்திரிக்கை முதல் பந்தி வரை என பல லட்ச ரூபாயை செலவு செய்து பிரமாண்டத்தை காட்டுவார்கள். குறிப்பாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமணம் முடிந்தவுடன் வாழை இலையில் சுடச்சுடச் அருசுவை விருந்து பரிமாறி மகிழ்ச்சியோடு தாம்பூல பை கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த தாம்பூல பையில் தேங்காய், சாத்துக்குடி, லட்டு, கடலை மிட்டாய், புத்தகம், மரக்கன்றுகள், பூச்செடிகள், பாத்திரங்கள் போன்றவற்றில் ஏதாவது ஒன்று இடம்பெறும். கண்டிப்பான முறையில் வெற்றிலைப் பாக்குப் போட்டு தாம்பூல பை கொடுப்பார்கள்.

அதேபோல், திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் ஏதாவது வித்தியாசத்தை காட்ட விரும்புபவர்கள் மணமக்களுக்கு விதவிதமான பரிசுகளை வழங்குவதை பார்த்திருக்கிறோம். ஆனால், புதுச்சேரியில் கடந்த 28-ந்தேதி நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த இளைஞருக்கும், புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நகரப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பில் கலந்துகொண்டவர்களை குஷிப்படுத்தும் வகையில் மணமகன் சார்பில் வழங்கிய தாம்பூலப் பையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் ஒரு குவாட்டர் சரக்கு பாட்டிலையும் சேர்த்து கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றனர். இந்த தாம்பூல பையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் திருமணத்திற்கு வந்த பெண்கள், பெரியவர்கள் உட்பட அனைவருமே பெற்றுச் சென்றனர். 

திருமணத்திற்கு வந்தவர்களை குஷிபடுத்தும் வகையில் திருமண வீட்டார் செய்த இந்த செயல் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வரும் சூழலில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழ்நாட்டில் திருமண மண்டபங்களில் மது விருந்து நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகிய உடனேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அந்த அறிவிப்பு உடனடியாக வாபஸ் பெறப்பட்டது. இந்தநிலையில் புதுவிதமாக தாம்பூல பையில் மதுபாட்டிலை வைத்து கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்