OTT Review: அறுவையா அலப்பறையா? - தலை வெட்டியான் பாளையம் படம் எப்படி?
OTT Review: சித்தார்தாக நடித்து இருக்கும் அபிஷேக் குமார், ஆரம்பத்தில் கதாபாத்திரத்திற்கு அந்நியமாக நின்றாலும், போக, போக கதாபாத்திரத்திற்கு நெருக்கமாக வர,முடிந்த அளவு முயற்சி செய்திருக்கிறார் - தலை வெட்டியான் பாளையம் விமர்சனம்

தலைவெட்டியான் விமர்சனம்
ஹிந்தியில் மூன்று சீசன்களாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ' பஞ்சாயத் ' தொடரின் ரீமேக் காக, அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும் தொடர் ' தலைவெட்டியான் பாளையம்.' சேத்தன், திவ்யதர்ஷினி, அபிஷேக் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த தொடரை இயக்குநர் நாகா இயக்கி இருக்கிறார்.
கதையின் கரு
எம்பிஏ படித்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற நினைப்பில், அதற்கு தயாராகி கொண்டிருக்கும் சித்தார்த்திற்கு ( அபிஷேக்) திருநெல்வேலி அருகில் இருக்கும் தலைவெட்டியான் பாளையம் என்ற கிராமத்தில் ஊராட்சி மன்ற செயலாளராக வேலை கிடைக்கிறது. அங்கு ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கும் மீனாட்சி தேவியின் கணவரான மீனாட்சி சுந்தரம், மனைவியின் இடத்தில் இருந்து கொண்டு அவரின் அனைத்து பொறுப்புகளையும் கவனித்து வருகிறார். இந்தச் சூழலில் அங்கு செல்லும் சித்தார்த்துக்கு அந்த கிராமத்து சூழ்நிலையும், அங்குள்ள மக்களும் கொடுக்கும் பிரச்சினைகள் என்ன? அதனை அவர் எப்படி சமாளித்தார்? அவரின் எம்பி ஏ கனவு பலித்ததா? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் தலைவெட்டியான் பாளையம் தொடரின் கதை!
செயற்கைத்தனம் பலவீனம்
சித்தார்தாக நடித்து இருக்கும் அபிஷேக் குமார், ஆரம்பத்தில் கதாபாத்திரத்திற்கு அந்நியமாக நின்றாலும், போக, போக கதாபாத்திரத்திற்கு நெருக்கமாக வர,முடிந்த அளவு முயற்சி செய்திருக்கிறார். சில இடங்களில் அவரின் எக்ஸ்ப்ரஷன்கள் சிரிக்க வைக்கின்றன. ஆனால், அழுத்தம் நிறைந்த காட்சிகளில் அவர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு நடித்து இருக்கலாம். சேத்தன் - திவ்ய தர்ஷனி இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க் அவுட் ஆகி இருக்கிறது.