Kangana Ranaut: ‘தப்பு பண்ற எல்லாத்துக்கும் இங்க காரணம் இருக்கு’- அதிகாரிக்கான ஆதரவு குரலுக்கு கங்கனா ரனாவத் பதிலடி
Kangana Ranaut: தன்னை அறைந்த சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிளை புகழ்ந்தவர்களை கங்கனா கண்டித்திருக்கிறார். - கங்கனா ரனாவத்

சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்பி கங்கனா ரனாவத்தை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பெண் அதிகாரி ஒருவர் அறைந்தது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
விளக்கம் அளித்த கங்கனா ரனாவத்
இதுகுறித்து பாலிவுட் நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தளத்தில், "நான் பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு ஒன்றும் ஆகவில்லை, நான் நன்றாக இருக்கிறேன். சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்து நான் வெளியே வந்தவுடன் இரண்டாவது கேபினில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் என் முகத்தில் அறைந்தார்." என்று அவர்அந்த பதிவில் கூறி இருந்தார்.
தனது கன்னத்தில் அறைந்த அதிகாரியான குல்விந்தர் கவுரின் மீது சிஐஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரல் நினா சிங்கிடமும் கங்கனா ரனாவத் புகார் அளித்தார். கங்கனா டெல்லியில் போராடும் விவசாயிகள் குறித்து தவறாக பேசியதாகவும், அந்த கருத்துக்களால் அதிருப்தி அடைந்த குல்விந்தர் கவுர் கங்கனாவை அறைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மீது காவல்நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.