50 வயதைக் கடந்தாலும் குறையாத மார்க்கெட்.. கனவு, காதல், கிசுகிசு, சூழ புகழ் உச்சத்திற்கு சென்ற நடிகை.. HBD ஐஸ்வர்யா ராய்
உலக அழகி, 50 வயதைக் கடந்திருந்தாலும் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வரும் நடிகை ஐஸ்லர்யா ராய் இன்று தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

20 நூற்றாண்டுகளைக் கடந்த இந்த உலகில், எத்தனையோ பேர் தங்கள் அழகாலும் வசீகரத்தாலும் மக்களைக் கவர்ந்திருக்கலாம். ஆனால், 21வது வயதில் தொடங்கிய ஒரு பயணத்தால் மக்களை ஈர்க்கத் தொடங்கிய ஒரு நபர் 25 ஆண்டுகளைக் கடந்தும் துளி அளவும் மாறாமல் அதே ஈர்ப்போடு இருக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.. அவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.
நிறைவேறாத மருத்துவர் கனவு
கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஐஸ்வர்யா ராய். துளுவைத் தாய்மொழியாக கொண்ட அவரது குடும்பம் சிறுவயதிலேயே மும்பைக்கு குடிபெயர்ந்தது. இதனால், பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு என எல்லாமே அங்கேயே பயின்றார்.
படிப்பில் கெட்டிக்காரியாக இருந்த ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு சிறந்த மருத்துவராக வரவேண்டும் என்ற ஆசை இருந்து வந்ததாம். ஆனால், படக்கும் சமயத்தில் அவர், நடனத்தின் மீதும் இசையின் மீதும் கொண்ட ஈடுபாடு அவரை மாடலிங் பக்கம் திருப்பியது. இதையடுத்து, அவருக்கு சிறு சிறு விளம்பர வாய்ப்புகள் வந்த நிலையில், ஃபோர்டு கம்பெனி நடத்திய போட்டியில் இண்டர் நேஷனல் சூப்பர் மாடலாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் அமீர்கானுடன் நடித்த பெப்சி விளம்பரம் அவரை சினிமா துறைக்கு வரும் முன்பே மக்களிடம் பிரபலமாக்கியது.