Palani Thaipoosam: கோலாகலமாக நடந்த தெப்ப திருவிழா…தைப்பூச திருவிழா நிறைவு
பழனி மலைக்கோயில்ல தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், தைப்பூச திருவிழா நிறைவு பெற்றது.
முருக கடவுளின் அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடான பழனியில் தைப்பூச திருவிழா கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. பெரிய நாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழா 10 நாள்கள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
நாள்தோறும் காலை, மாலை என இரு நேரங்களிலும் பல்லக்கு, சுவாமிகளின் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் கடந்த 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து விழாவின் இறுதி நாளான நேற்று மாலை தெப்ப திருவிழா தொடங்கி நடைபெற்றது. இதில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோருடன் தெப்பகுளத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்படத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள். அங்கு ஆறு கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்து தீபா ஆராதனை காட்டப்பட்டது.
இந்த தெப்ப திருவிழாவை காண கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சுவாமியை தரிசித்தனர். பின்னர் சுவாமிகள் தெப்ப தேரில் மூன்று முறை தெப்ப குளத்தில் வலம் வந்தார். அப்போது தெப்ப குளத்தை சுற்றிலும் வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பின்னர் முத்துக்குமார சுவாமி, வள்ளி மற்றும் தெய்வானையுடன் பெரியநாயகி அம்மன் கோயிலில் எழுந்தருளினார். இரவு 11 மணிக்கு கொடி இறக்கப்பட்டு தைப்பூச திருவிழா நிறைவு பெற்றது.
டாபிக்ஸ்